அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில், சிங்கப்பூர்
ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில் சிங்கப்பூரில் டாங்க் வீதியில் (Tank Road) அமைந்திருக்கிறது. தென்கிழக்காசியாவிலேயே மிகப் பெரிய கோயிலாக இக்கோயில் உள்ளது. வரலாறுதமிழ்நாட்டின் புதுக்கோட்டை, இராமநாதபுரம் பகுதிகளைச் சேர்ந்த நாட்டுக்கோட்டை செட்டியார்களின் முயற்சியில் 1859 இல் கட்டப்பட்டது. ஒக்ஸ்லி எனும் மருத்துவரிடம் நிலத்தை வாங்கி கோயில் கட்டப்பட்டது. முருகப் பெருமானாகிய தண்டாயுதபாணியே மூலவராக இருக்கிறார். முதல் திருக்குட நன்னீராட்டு விழா ஏப்ரல் 4 1859 இல் நடந்தது. பின்னர் பிப்ரவரி 2, 1936 இலும், பின்னர் ஜூலை 7, 1955 இலும் கோயில் திருப்பணி நடந்து, நன்னீராட்டு விழாக்கள் நடைபெற்றன. கருவறையின் நுழைவாயிலில் ஜம்பு விநாயகர் இடது புறமாகவும், இடும்பர் வலப்புறமாகவும் அமர்ந்திருக்கின்றனர். சிவன், அம்பிகை இருவருக்கும் தனிதனிக் கருவறைக் கோயில்கள் இப்போதுள்ளன.தெண்டாயுதபாணி ஆலயத்தின் மூலவர் வேல் வடிவிலேயே அமைக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் நடைபெறும் நீராட்டு அபிஷேகம் வேலுக்கே செய்யப்படுகிறது. முதலில் இங்கு வேல் வழிபாடுதான் இருந்தது. பின்னர் 1878ல் சிவன், பார்வதி சந்நிதிகள் ஏற்படுத்தப்பட்டன. பின்னர் நவகிரக சந்நிதியும் உருவாக்கப்பட்டது. சிவன், அம்பிகையுடன் தண்டாயுதபாணி, நந்தி, தட்சிணாமூர்த்தி, சண்டேசுவர், வைரவர், அண்ணாமலையார், பிரம்மா, துர்க்கை, நவக்கிரங்கள் ஆகிய திருவுருவங்களும் உள்ளன. நடராசர் சிவகாமி செப்புத் திருமேனி உருவங்கள் தனியே உள்ளன. இத்திருவுருவங்களுக்கு ஆகம முறைப்படி சிவாச்சாரியார்கள் பூசை செய்கின்றனர். தண்டாயுதபாணிக்குப் பண்டாரங்கள் பூசை செய்கின்றனர். சிறப்புகள்இங்கு அமைந்துள்ள 75 அடி உயர ராஜகோபுரம் இப்பகுதியில் உள்ள உயரமான கோபுரமாக கருதப்படுகிறது. கோயிலுக்குள் நுழைந்ததும் அர்த்த மண்டபமும் அலங்கார மண்டபமும் அமைந்துள்ளன. வலதுபுறத்தில் கோயில் அலுவலகமும் இடது புறத்தில் நூலகமும் உள்ளன. மண்டபத்தூண்களில் முருகனின் அறுபடை வீடுகள் ஆறு சிலைகளாக செதுக்கப்பட்டுள்ளன. முருகப்பெருமானின் பல்வேறு அலங்காரத் தோற்றங்கள், சிவ தாண்டவம் ஆகியவை வண்ண சிமெண்டால் உருவாக்கப்பட்டுள்ளன. கோயிலின் விமானத்தைச் சுற்றியுள்ள 48 கண்ணாடி மாடங்களில் தெய்வச் சிற்பங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன.அலங்கார மண்டபச் சுவரில் பளிங்குக் கற்களால் அமைந்த வண்ண மயில் வடிவம் ஒன்றிருக்கிறது. ஆனந்தத் தாண்டவ நடராஜரும், மாணிக்கவாசகரும் சிவகாமி அம்மையும் சுதை சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளனர். முக்கிய விழாக்கள்தைப்பூசம், நவராத்திரி, கந்த சஷ்டி, லட்சார்ச்சனை ஆகிய விழாக்கள் சிறப்பாக இங்கு நடைபெறுகின்றன. சிங்கப்பூர் வாழ் இந்துக்களிடையே பிரபலமான இந்த கோயிலின் முக்கிய திருவிழா தைப்பூசத் திருவிழாவாகும். தைப்பூசத்திற்கு முன்னதாக முருகப்பெருமான் தேரில் ஏறி கியோங் சைக் சாலையில் உள்ள சித்தி விநாயகர் கோயிலுக்கு செல்வார். முருகப் பெருமானை பக்தர்கள் தங்கள் தோளில் சுமந்து வந்து வெள்ளித் தேரில் ஏற்றுவர்.இந்த கோயிலின் மற்றொரு முக்கிய திருவிழா நவராத்திரி திருவிழா. இந்த திருவிழாவின்போது பிரார்த்தனைகளும் கலாசார நிகழ்ச்சிகளும் இடம் பெறும். கந்த சஷ்டி விரதம், கிருத்திகை பிரார்த்தனை, குருபூஜை போன்றவை இதர முக்கிய திருவிழாக்கள். சமூகப்பணிதிருமுறை வகுப்புகளும்,தேவார வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.