உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்த் - தமிழ் மக்களுக்கு சமர்ப்பிப்பதாக அறிவிப்பு

தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்த் - தமிழ் மக்களுக்கு சமர்ப்பிப்பதாக அறிவிப்பு

இந்திய திரைப்படத் துறையில் வாழ்நாள் சாதனை புரிந்த திரைக் கலைஞர்களுக்காக வழங்கப்படும் விருது தாதா சாகேப் பால்கே விருது. இந்திய திரைப்படத் துறையின் தந்தை என அழைக்கப்படும் தாதா சாகேப் நினைவாக இந்த விருது 1969ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியத் திரையுலகில் பெரும் சாதனைகளைப் படைத்த பலருக்கு இதுவரை இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. தென்னிந்தியத் திரையுலகத்திலிருந்து எல்.வி.பிரசாத், நாகிரெட்டி, நாகேசுவரராவ், ராஜ்குமார், அடூர் கோபாலகிருஷ்ணன், டி.ராமாநாயுடு, கே.விஸ்வநாத் உள்ளிட்டோர் இந்த விருதை வாங்கியுள்ளனர்.


1996ம் ஆண்டு தமிழ்த் திரையுலகத்திலிருந்து நடிகர் சிவாஜிகணேசன் இந்த விருதைப் பெற்றார். 2010ம் ஆண்டு தமிழ்த் திரைப்பட இயக்குனர் கே.பாலசந்தருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. 2019ம் ஆண்டுக்கான விருது தமிழ் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த்திற்கு இன்று(அக்., 25) டில்லியில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது. குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தாதா சாகேப் விருதை அவருக்கு வழங்கினார்.

சினிமாவில் 45 ஆண்டுகள் சிறப்பாக பங்காற்றியதற்காக ரஜினியை கவுரவித்து இந்த விருது வழங்கப்பட்டது. விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்த், மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ், மாப்பிள்ளை தனுஷ், பேரக்குழந்தைகள் ஆகியோருடன் கலந்து கொண்டார்.


காணொளி வெளியீடு
முன்னதாக ரஜினிக்கு விருது வழங்கும் முன்பாக அவரைப்பற்றிய காணொளி ஒளிபரப்பட்டது. ரஜினி சினிமாவுக்கு என்ட்ரி ஆனது முதல் அவரது பல சாதனைகளை இந்த காணொளியில் வெளியிட்டனர்.

அமிதாப்பச்சன் பேசி இருப்பதாவது: இந்திய சினிமாவின் இந்த அற்புதத்தைப் பற்றி விவரிக்க ஆங்கில அகராதியில் ஒருசில வார்த்தைகள் மட்டுமே மீதமுள்ளன. மிக எளிமையான ஒரு பின்னணியிலிருந்து உயர்ந்து, இப்படியொரு இடத்தை அவர் பிடித்துச் சாதித்துள்ளார் என்பதே அசாதாரண விஷயம் என்பதையும் தாண்டிய ஒன்று.

மோகன்லால் பேசி இருப்பதாவது: ரஜினிகாந்தின் தனித்துவமான ஸ்டைல், கவர்ச்சியைப் பற்றிப் பேசாமல், அவரது பாவனைகள், அவருக்கே உண்டான அந்த நடையைப் பற்றிப் பேசாமல் அவரைப் பற்றிப் பேசவே முடியாது. இவை முத்திரையைப் பதித்தன, அவரது சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் ஒரு பகுதியாக மாறியுள்ளன.

ஏ.ஆர்.ரஹ்மான் பேசியிருப்பதாவது: நான் ரஜினிகாந்திடமிருந்து கற்ற அற்புதமான விஷயம் என்னவென்றால், அவர் எப்படி உருமாறுகிறார் என்பதைத்தான். கேமராவுக்குப் பின்னால் அவரை நீங்கள் அடையாளம் கண்டுகொள்ளவே முடியாது. கேமராவுக்கு முன்னால் ஒப்பனை செய்துகொண்டு நிற்கும்போது மொத்தமாக உருமாறி நிற்பார். ஒரு மின்னல் போல.

தமிழ் மக்களுக்கு சமர்ப்பணம்
விருது பெற்றதும் ரஜினிகாந்த் பேசுகையில், ‛ விருது வழங்கிய மத்திய அரசுக்கும், என்னை வாழ வைக்கும் தமிழ் மக்களுக்கும் நன்றி. தாதா சாகேப் பால்கே விருதை எனது குருவான இயக்குனர் பாலச்சந்தர், அண்ணன் சத்யநாராயணராவ், நண்பர் ராஜ்பகதூர், என் திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், சக நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், பத்திரிக்கை ஊடக நண்பர்கள், என்னுடைய ரசிகர்கள் மற்றும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு சமர்பிக்கிறேன், எனத் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !