என் கண்ணுக்கு முன்னால் வளர்ந்த குழந்தை - புனித் குறித்து ரஜினி உருக்கம்
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார்(46) மறைவுக்கு 10 நாட்களுக்கு பின் நடிகர் ரஜினிகாந்த் ஹூட் செயலி மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார், கடந்த அக்., 29ம் தேதி உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். லட்சக்கணக்கான ரசிகர்கள் அவருக்கு திரண்டு அஞ்சலி செலுத்தினர். தமிழ் நடிகர்கள் பலரும் அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
புனித் மறைந்த சமயத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் நடிகர் ரஜினிகாந்த். அதனால் அப்போது அவருக்கு இரங்கல் தெரிவிக்கவில்லை. தற்போது குணமாகி வீட்டில் ஓய்வு பெற்று வரும் நிலையில் புனித் மறைவுக்கு ஹூட் செயலி மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார் ரஜினி.
அதில் அவர் கூறியிருப்பதாவது : ‛‛நான் மருத்துவமனையில் இருந்தபோது புனித் அகால மரணம் அடைந்தார். அந்த செய்தி இரண்டு நாட்களுக்கு பின் தான் எனக்கு தெரிவிக்கப்பட்டது. அதை கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். என் கண்ணுக்கு முன்னால் வளர்ந்த குழந்தை, திறமையான அன்பும், பண்பும் கொண்ட அருமையான குழந்தை. புகழின் உச்சியில் இருக்கும் நேரத்தில் இவ்வளவு சின்ன வயதில் அவர் மறைந்துவிட்டார். அவரது இழப்பை ஈடு செய்யவே முடியாது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. புனித் ஆத்மா சாந்தி அடையட்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.