ரூ.50 கோடி கிளப்பில் இணைந்த குருப்
துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த வெள்ளியன்று குருப் திரைப்படம் தியேட்டர்களில் வெளியானது. இந்தப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் வசூல் ரீதியாக படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அந்தவகையில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் இந்தப்படம் ரூ.50 கோடி வசூலித்துள்ளது. இந்தப்படத்தின் ஹீரோ என்று மட்டுமல்லாமல் படத்தின் தயாரிப்பாளர் என்கிற முறையிலும் இரட்டிப்பு சந்தோஷத்தில் இருக்கிறார் துல்கர் சல்மான்.
“வாவ். நிச்சயமாக இது பெரிய தொகை தான். தூக்கமில்லாத உறவுகள், நிச்சயத்தன்மை இல்லாத, சுய சந்தேகங்களை கூட ஏற்படுத்திய நிகழ்வுகள், டென்சன் மற்றும் மன அழுத்தம் என நாங்கள் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் மொத்தமாக பலன் கிடைத்துள்ளது. மீண்டும் தியேட்டர்களுக்கு வந்ததற்கும் எங்களை ஏற்றுக்கொண்டதற்கும் மிக்க நன்றி” என தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
தற்போது தென்னிந்திய மொழிகளையும் தாண்டி இந்தியிலும் துல்கர் சல்மான் நடித்து வருவதால் அவரது படங்களுக்கான வியாபர எல்லையும் விரிவடைந்துள்ளது. அதனால் குருப் படத்தை பான் இந்தியா படமாக இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகள் என ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிட்டார்கள். அதன் காரணமாகத்தான் நான்கு நாட்களில் இந்த வசூலை இந்தப்படம் எட்டியுள்ளது.