ரெண்டகம் படப்பிடிப்பை முடித்த அரவிந்த்சாமி - குஞ்சாக்கோ
மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் முதன்முறையாக ரெண்டகம் என்கிற படத்தின் மூலம் தற்போது தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைக்கிறார். மலையாளம், தமிழ் என இருமொழிப்படமாக உருவாகும் இந்தப்படத்தில் அரவிந்த்சாமி இன்னொரு கதாநாயகனாக நடிக்கிறார். அந்தவகையில் அரவிந்த்சாமியும் பல வருடங்கள் கழித்து மீண்டும் மலையாளத்தில் நுழைந்துள்ளார்.
இரண்டு நண்பர்களை பற்றிய கதையாக உருவாகும் இந்த படத்திற்கு மலையாளத்தில் ஓட்டு என டைட்டில் வைத்துள்ளனர். இதில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடித்துள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்பு டொவினோ தாமஸ் நடித்த 'தீவண்டி' என்கிற வெற்றி படத்தை இயக்கிய டி.பி.பெலினி என்பவர் இயக்கியுள்ளார்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்துள்ளது. படக்குழுவினருடன் அரவிந்த்சாமி - குஞ்சாக்கோ இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றும் சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. நடிகர் ஆர்யா பங்குதாரராக உள்ள ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம் தான் இந்தப்படத்தை தயாரித்துள்ளது