உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பொங்கல் - புதிய படங்கள் வெளிவர குறையும் வாய்ப்புகள்

பொங்கல் - புதிய படங்கள் வெளிவர குறையும் வாய்ப்புகள்

2022ம் ஆண்டின் துவக்கமே கொரோனாவின் மூன்றாவது அலையுடன் ஆரம்பமாகியுள்ளது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு என அமல்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என பல மாநிலங்கள் அறிவித்துவிட்டன. தொடர்ந்து பல மாநிலங்களில் புதுப்புது கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள்.

இந்த ஆண்டின் முதல் பெரிய படமாக இந்த வாரம் ஜனவரி 7ம் தேதி வெளிவர இருந்த 'ஆர்ஆர்ஆர்' படத்தைத் தள்ளி வைத்துவிட்டார்கள். பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள 'ராதேஷ்யாம்' படம் ஜனவரி 14 அன்று வெளியாகும் என்று நேற்று வரை தகவல்கள் வெளிவந்தன. கர்நாடகாவில் தற்போது வார இறுதி நாட்களில் ஊரடங்கு விதித்துவிட்டார்கள்.

தமிழகத்தில் என்ன மாதிரியான கட்டுப்பாடுகள் என்பது இன்று தெரிய வரும். நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள படங்கள் திட்டமிட்டபடி வெளிவர வாய்ப்பில்லை என்பது தான் தற்போதைய சூழ்நிலை.

'ராதேஷ்யாம், வலிமை, வீரமே வாகை சூடு' ஆகிய படங்கள் பொங்கல் வெளியீடு என அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றைத் தள்ளி வைக்கவே அதிக வாய்ப்புகள். மிக விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !