உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முடிவுக்கு வரும் 'புஷ்பா'வின் ஓட்டம்

முடிவுக்கு வரும் 'புஷ்பா'வின் ஓட்டம்

சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலரது நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் 17ம் தேதி 'புஷ்பா' படத்தின் முதல் பாகம் வெளிவந்தது. தெலுங்கில் தயாரான இப்படம் தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

தெலுங்கைத் தவிர மற்ற மொழிகளில் படத்திற்கு பெரிய அளவில் எந்த விளம்பரத்தையும் செய்யவில்லை. இருந்தாலும் படம் எதிர்பார்ப்பிற்கும் மேலான வசூலை அள்ளியது. தமிழகத்தில் மட்டும் 25 கோடிக்கும் அதிகம் வசூலித்து லாபத்தைக் கொடுத்தது.

கடந்த வாரம் 7ம் தேதி இப்படம் ஹிந்தி தவிர மற்ற மொழிகளில் ஓடிடி தளத்திலும் வெளியானது. ஹிந்தியில் தற்போது வரை தியேட்டர் வசூல் மூலம் 80 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றுள்ளது. வரும் ஜனவரி 14ம் தேதி ஓடிடி தளத்தில் ஹிந்தியிலும் இப்படம் வெளியாக உள்ளது. அதனால், அடுத்த இரண்டு நாட்களுக்குள் இப்படத்தின் தியேட்டர் ஓட்டம் முடிவுக்கு வர உள்ளது.

இதுவரையில் மொத்தமாக 325 கோடி அளவில் வசூலித்துள்ள இந்தப் படம் கடந்த ஆண்டின் முக்கிய வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !