‛ஜெயிலர்' ஜெயித்தது ரஜினி பவரால்தான் : நெல்சன்
ரஜினி நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த 10ம் தேதி 'ஜெயிலர்' படம் வெளியானது. தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். அனிருத் இசை அமைத்திருந்தார். படம் முதல் வாரத்தில் ரூ.375.40 கோடி வசூலித்திருப்பதாக தயாரிப்பு தரப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள நிலையில் படத்தில் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நிறைய பேர் என்னை சந்தேகமாக பார்த்தபோது ரஜினி சார் என் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தார். இந்த படம் இங்கே வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவர் இப்போது இமயமலையில் ஆன்மிக பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அவர் வந்ததும் அவரை நேரில் சந்தித்து நன்றி சொல்ல வேண்டும்.
இந்த படத்தில் ரஜினி சாரின் கண்களை அதிகளவு குளோசப் காட்சிகளில் பயன்படுத்தி இருந்தோம். அதற்கு காரணம் எப்போதுமே அவர் நம்மை நோக்கி பார்க்கும்போது அவரது கண்களின் பார்வை தீர்க்கமாக இருக்கும். நான் மட்டுமல்ல, ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக்கும் இதை என்னிடம் கூறி ரஜினி சாரின் கண்களுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து காட்சிகளை வைக்க விரும்பினார். படத்தில் அந்த காட்சிகளை பின்னணி இசையுடன் பார்க்கும்போது மாஸாக இருந்தது.
வாழ்த்திய விஜய்
ஜெயிலர் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வரும் போதே விஜய் சார் எனக்கு வாழ்த்துக்கள் கூறினார். இப்போது ஜெயிலர் படத்தை பார்த்த பிறகு விஜய் சார் என்னிடம் சூப்பர், உங்களுக்கு இந்த படம் வெற்றி பெற்றதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி என மெசேஜ் செய்தார் என நெல்சன் தெரிவித்தார்.
இவ்வாறு அவர் பேசினார்.