மித்ரனை தேடி வரும் எதிரி - வெளியானது ‛தனி ஒருவன் 2' அறிவிப்பு
மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி நடிப்பில் கடந்த 2015ல் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛தனி ஒருவன்'. இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதாக ஏற்கனவே மோகன் ராஜா அறிவித்திருந்தார். ஆனால் சில காரணங்களால் தள்ளிப்போனது. தனி ஒருவன் படம் வெளியாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில் இன்று(ஆக., 28) இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பை புரொமோ வீடியோ உடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி இந்த படத்தை மோகன் ராஜா இயக்க, ஜெயம் ரவி, நயன்தாரா தொடருகின்றனர். முதல்பாகத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனமே தயாரிக்கின்றனர்.
முதல்பாகத்தில் எதிரியை தேடி ஜெயம் ரவி செல்வார். இந்த பாகத்தில் எதிரி இவரை தேடி வருகிறாராம். முதல்பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திலும் ஹீரோவுக்கு நிகரான வில்லன் ரோல் இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அதில் யார் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இப்படி படத்தின் துவக்க புரொமோவிலேயே ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளனர்.
தனி ஒருவன் 2, மோகன் ராஜாவிற்கு 11வது படமாகும். தனது தம்பி ஜெயம் ரவி உடன் இது 7வது படம். நயன்தாரா உடன் இது 4வது படம். ஏஜிஎஸ் உடன் இது 3வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுக வீடியோ லிங்க் : https://www.youtube.com/watch?v=U3vBNFPZYCY&feature=youtu.be