உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நான் எந்தக் கட்சியும் சாராதவன் - அல்லு அர்ஜுன் விளக்கம்

நான் எந்தக் கட்சியும் சாராதவன் - அல்லு அர்ஜுன் விளக்கம்

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜுன். இரு தினங்களுக்கு முன்பு நந்தியால் சென்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் அவரது நண்பர் ரவிசந்திர கிஷோர் ரெட்டிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அது பவன் கல்யாண் ரசிகர்களை எரிச்சலடையச் செய்தது. பவன் கல்யாண், அல்லு அர்ஜுன் இருவரும் உறவினர்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. இருப்பினும் அல்லு அர்ஜுன் பவன் கல்யாணுக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்.

இன்று ஆந்திரா மாநில சட்டசபைத் தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தல், தெலங்கானா லோக்சபா தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெற்று வருகிறது. ஐதராபாத்தில் உள்ள ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஓட்டுச்சாவடியில் தனது ஓட்டினை பதிவு செய்த அல்லு அர்ஜுன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “நான் எந்தக் கட்சியையும் சாராதவன் என்பதை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். அனைத்து கட்சிகளுக்கும் பொதுவானவன் நான். தயவு செய்து அனைவரும் வந்து ஓட்டு போடுங்கள். இன்றைய நாள் நமக்கு பொறுப்பான நாள். வெயில் தாக்கம் அதிகம் இருக்கிறது. இருந்தாலும் நமது நாட்டை அடுத்த ஐந்து வருடங்களுக்கான முக்கியமான நாள் இன்று,” என்று தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !