பிளாஷ்பேக்: அண்ணன், தங்கை பாசத்தின் அடையாளம் 'பாசமலர்'
இன்றைக்கும் பாசமிக்க அண்ணன், தங்கைகளை 'பாசமலர் பிறப்புகள்' என்று சொல்லும் வழக்கம் இருக்கிறது. அந்த அளவிற்கு அண்ணன், தங்கை பாசத்தை கொட்டிக் கொடுத்த படம் 'பாசமலர்'. அதன்பிறகு பல படங்கள் வந்தாலும் அவைகள் பாசமலரோடுதான் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது.
அண்ணனாக சிவாஜியும், தங்கையாக சாவித்ரியும் நடித்திருந்தார்கள். சாவித்திரியின் கணவராக ஜெமினி கணேசன் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு சாவித்ரியும், ஜெமினி கணேசனும் நிஜத்திலும் கணவன் மனைவி ஆனார்கள். சாவித்ரி நிஜத்தில் சிவாஜியின் தங்கையாகவே இருந்தார்.
இந்த படத்தை பீம் சிங் இயக்கியிருந்தார். ஆரூர்தாஸ் திரைக்கதை வசனம் எழுதியிருந்தார். விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர். படத்தில் இடம்பெற்ற 'வாராயோ தோழி வாராயோ' பாடல் திருமண வீடுகளின் கீதமானது. மலர்களை போல் தங்கை..., மலர்ந்து மலராத..., எங்களுக்கும் காலம் வரும்... உள்ளிட்ட பாடல்களும் பட்டித்தொட்டியெங்கும் ஹிட் அடித்தன. படம் வெளியான பிறகு, இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தைக்கு பாசமலர் படத்தில் சாவித்திரியின் கதாபாத்திரமான 'ராதா' என பெயரிட்டனர். 1961ம் ஆண்டு மே 27ம் தேதி வெளியிடப்பட்டது. தற்போது 63 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.