திருவனந்தபுரம் தியேட்டரில் ராயன் படத்தை மொபைலில் படம் பிடித்த நபர் கைது
திரைப்படங்கள் ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப தொழில்நுட்பங்களை அப்டேட் செய்து கொள்வது போல, அதை திருட்டுத்தனமாக வெளியிடுவோரும் ஏதோ ஒரு விதத்தில் இப்போதும் தொடர்ந்து புதிதாக ரிலீஸ் ஆகும் படங்களின் பைரசி வீடியோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். புதிய படங்கள் வெளியாகும் அன்றே இணையதளத்தில் அந்த படங்கள் வெளியாகி தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய நஷ்டத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. அப்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான குருவாயூர் அம்பல நடையில் என்கிற படமும் இதேபோன்று இணையத்தில் அனுமதியின்றி திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டது. இது குறித்து படத்தின் தயாரிப்பாளரும் பிரித்விராஜின் மனைவிமான சுப்ரியா மேனன் காவல்துறையில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரித்து வந்ததுடன் திருவனந்தபுரம், கொச்சி ஆகிய பகுதிகளில் உள்ள திரையரங்கு ஊழியர்களிடம் இது குறித்து கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினர். அப்படி சமீபத்தில் வெளியான தனுஷின் ராயன் திரைப்படம் திருவனந்தபுரம் திரையரங்கு ஒன்றில் திரையிடப்பட்டு ஓடிக் கொண்டிருந்த நிலையில் அங்கே கொச்சியை சேர்ந்த ஸ்டீபன் என்கிற நபர் படத்தை தனது மொபைல் போனில் படம் பிடித்ததை திரையரங்கு ஊழியர்கள் கையும் களவுமாக கண்டுபிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இவர் இப்படி தொடர்ந்து படங்களை திரையரங்குகளில் படம் பிடித்து மதுரையில் உள்ள சிலரிடம் விற்பனை செய்து வந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.