வெப் தொடராக உருவாகும் கோலி சோடா 3ம் பாகம்
விஜய் மில்டன் இயக்கத்தில் உருவான 'கோலி சோடா' படம் பெரிய வெற்றி பெற்றது. வெவ்வேறு ஊர்களில் இருந்து பிழைப்பு தேடி கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வரும் 4 சிறுவர்கள் தங்களுக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்த போராடும் கதை. இந்த படத்திற்கு பிறகு இதன் 2ம் பாகம் வெளிவந்தது . அது போதிய வரவேற்பை பெறவில்லை. தற்போது இதன் மூன்றாம் பாகம் 'கோலி சோடா - தி ரைசிங்' என்ற பெயரில் வெப் தொடராக தயாராகி உள்ளது.
கோலி சோடா முதல் பாகத்தில் வந்த சிறுவர்கள் இப்போது வாலிப வயதை அடைந்து என்ன மாதிரியான சவால்களை எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் கதை. இந்த தொடரில் ஷாம், அபிராமி, புகழ், ரம்யா நம்பீசன், அவந்திகா மிஸ்ரா, சேரன், விஜய் முருகன், பரத் ஸ்ரீனி, கிஷோர், பாண்டி, உதயராஜ், முருகேஷ், குட்டி மணி, அம்மு அபிராமி ஆகியோருடன் சீதா, ஸ்வேதா, சுஜாதா, இம்மான் அண்ணாச்சி, ஜான் மகேந்திரன், மதுசூதனன் ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்து இயக்கி உள்ளார். ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரித்துள்ளார், எஸ்.என்.அருணகிரி இசை அமைத்துள்ளார். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி மொழிகளில் வெளியாகிறது.