இந்த வாரமும் தாக்குப் பிடிக்கும் 'தி கோட்'
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து இந்த மாதம் செப்டம்பர் 5ம் தேதி வெளியான படம் 'தி கோட்'. தமிழகம், கர்நாடகாவில் மட்டும் இப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. மற்ற மாநிலங்களில் குறிப்பிடும்படியான வரவேற்பைப் பெறவில்லை. இருந்தாலும் இப்படத்தின் வசூல் 450 கோடியை நெருங்கிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படம் மூன்று வாரங்களைக் கடந்து தற்போது நான்காவது வாரத்தில் நுழைந்துள்ளது. இருந்தாலும் பல ஊர்களில் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த வாரமும், இன்றும் சில புதிய படங்கள் வெளிவந்தாலும் 'தி கோட்' படத்திற்கான வரவேற்பும், இன்னும் சில தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருப்பதும் ஆச்சரியம்தான்.
சில மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் இன்றும், நாளை, நாளை மறுநாளும் 75 சதவீதத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிட வேண்டிய ஒன்று.