ஒரே நாளில் விஜய்யின் இரண்டு 'பூஜைகள்'
சினிமாவில் நடிப்பது வேறு அரசியலில் நடிப்பது வேறு. நடிகர் விஜய் தீவிர அரசியலுக்கு வருவதற்கு முன்பே நடிக்க ஆரம்பித்துவிட்டார் என்று விமர்சனங்கள் வர ஆரம்பித்துவிட்டன.
கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்றும் ஜோசப் விஜய், தேவைப்பட்டால் நெற்றியில் திருநீறு, குங்குமம் ஆகியவற்றை இட்டுக் கொண்டு தன்னை இந்து மத ஆர்வலர் என்று காட்டிக் கொள்வார். ஆனால், சமீபத்தில் ஈவெ ராமசாமியின் பிறந்தநாளன்று சென்னையில் உள்ள அவரது நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு வந்தார். மேலும், சமத்துவம், சம உரிமை, சமூக நீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம் என்று அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.
ஆனால், இன்று விஜய் சார்பாக இரண்டு பூஜைகள் சிறப்பாக நடத்தப்பட்டன. ஒன்று அவரது அரசியல் கட்சி மாநாட்டிற்காக நடைபெற்ற சிறப்பு பூஜை, மற்றொன்று அவரது கடைசி படமான விஜய் 69 படத்திற்கான பூஜை. தன்னை ஒரு நாத்திகவாதியாகவும், ஆத்திகவாதியாகவும் மாறி மாறி காட்டிக் கொள்ளும் விஜய் சார்பில் இன்று இரண்டு பூஜைகள் நடத்தப்பட்டது ஏன் என பலரும் தற்போது சமூக வலைத்தளங்களில் கேள்வி கேட்டு வருகிறார்கள்.