நவ., 22ல் ரிலீஸாகும் மிருணாள் குல்கர்னியின் ‛தாய் ஆகர்'
எழுத்தாளர் அம்ரிக் சிங் தீப்பின் தீர்த்தன் கீ பாத் என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் ‛தாய் ஆகர்'. குடும்ப வன்முறை மற்றும் பல ஆண்டுகளாக தவறான திருமணத்தால் பாதிக்கப்பட்ட ஹர்ஷிதா என்ற பெண்ணின் கதையாக இது உருவாகி உள்ளது. தேசிய மற்றும் சர்வதேச அளவில் பாராட்டுகளைப் பெற்ற பன்முக நடிகையான மிருணாள் குல்கர்னி முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். பிரவீன் அரோரா இயக்கி உள்ளார்.
இதன் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் பேசிய மிருணாள் குல்கர்னி, ‛‛தாய் ஆகர் படம் சமூகத்தில் காதல் மீதான இரட்டை மனப்பான்மை பற்றி காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களிடம் நமது சமூகத்தின் இரட்டை அணுகுமுறை மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த வலியை படம் தைரியமாக வெளிப்படுத்துகிறது. படத்தின் மைய கதாபாத்திரமான ஹர்ஷிதாவின் காதல் கதையுடன் உணர்வுப்பூர்வமாக சொல்லப்பட்டுள்ளது'' என்றார்.
பிரவீன் அரோரா கூறுகையில், ‛‛இந்த படம் பல திரைப்பட விழாக்களிலும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. காதல் விஷயத்தில் சமூகத்தின் இரட்டை மனோபாவம் படத்தில் மிக அழகாக காட்டப்பட்டுள்ளது. பாலிவுட்டில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு அழுத்தமான காதல் கதையை ரசிகர்கள் பார்க்க போகிறார்கள்'' என்றார்.
‛தாய் ஆகர்' படம் ஐஎப்எப்ஐ, சென்னை திரைப்பட விழா, கம்போடியா சர்வதேச திரைப்பட விழா என பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று பாராட்டுகளை பெற்றுள்ளது. வரும் நவம்பர் 22 அன்று திரையரங்குகளில் படம் வெளியாகிறது.