அல்லு அர்ஜுன் - பவன் கல்யாண் மோதல் தொடர்கிறதா?
'புஷ்பா 2' நடிகரான அல்லு அர்ஜுனுக்கும், ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணுக்கும் இடையிலான மோதல் இன்னும் தொடர்வதாகவே தெரிகிறது. நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலின் போது அல்லு அர்ஜுன் அவரது நண்பர் ஒருவருக்காகத் தேர்தல் பிரசாரம் செய்தார். முன்னாள் முதல்வர் ஒய்எஸ் ஜெகன்மோகன் ரெட்டி கட்சியைச் சேர்ந்த தனது நண்பருக்கு அல்லு அர்ஜுன் பிரசாரம் செய்தது பவன் தரப்பிற்குப் பிடிக்கவில்லை. இதனால், ஒரு நெருக்கடியான சூழல் இரண்டு குடும்பத் தரப்பிலும் இருந்தது.
இந்நிலையில் கடந்த வாரம் 'புஷ்பா 2' நெரிசல் மரணம் காரணமாக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட போது பவன் கல்யாணின் அண்ணன்கள் சிரஞ்சீவி, நாகபாபு ஆகியோர் உடனடியாக அல்லு அர்ஜுன் வீட்டிற்குச் சென்றார்கள். சிறையில் இருந்து வெளியில் வந்த பின், அவர்கள் இருவரது வீட்டிற்கும் தனது மனைவியுடன் சென்றார் அல்லு அர்ஜுன்.
ஆனால், அவரது கைது குறித்து இதுவரையிலும் பவன் கல்யாண் வெளிப்படையாக எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதனால், இரு தரப்புக்கும் இடையேயான மோதல் இன்னும் தொடர்வதாகவே தெரிகிறது.