ஆஸ்கர் போட்டியில் நுழைந்த இந்தியர்கள் உருவாக்கிய படம்
97வது ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட 'லாபட்டா லேடீஸ்' படம் வெளியேறினாலும், வெளிநாடு வாழ் இந்தியர்களால் உருவாக்கப்பட்ட 'சந்தோஷ்' என்ற படம் ஆஸ்கர் இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
ஏராளமான ஆவணப் படங்கள் இயக்கி புகழ்பெற்ற இங்கிலாந்தில் வாழும் இந்தியரான சந்தியா சூரி இயக்கி உள்ள படம் 'சந்தோஷ்'. இந்த படம் இங்கிலாந்து சார்பில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டு இறுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதில் சஹானா கோஸ்வாமி, சுனிதா ராஜ்வர், சஞ்சய் பிஸ்ஹாய் உள்பட பலர் நடித்துள்ளனர். லென்னர்ட் ஹிலேஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், லூசியா ஜெர்ஸ்டைன் இசை அமைத்துள்ளார். இந்த ஆண்டின் மே மாதம் இங்கிலாந்து, இந்தியா, ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளில் வெளியானது.
போலீஸ் அதிகாரியாக இருந்த கணவன் திடீரென இறந்ததால் அந்த வேலை மனைவிக்கு கிடைக்கிறது. அவர் ஒரு இளம் பெண் கொலையை எப்படி துப்பறிகிறார் என்பதுதான் கதை. படத்தை இயக்கிய சந்தியா சூரி இந்தியாவை சேர்ந்தவர். தந்தை மருத்துவ பணிக்காக இங்கிலாந்து சென்றதால் அங்கேயே பிறந்து வளர்ந்தவர். ஆவணப்படங்களுக்காக பல விருதுகளை வென்றவர்.