உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிரஞ்சீவிக்காக எழுதப்பட்ட கதையில் தான் வெங்கடேஷ் நடித்திருக்கிறார் ; அனில் ரவிபுடி

சிரஞ்சீவிக்காக எழுதப்பட்ட கதையில் தான் வெங்கடேஷ் நடித்திருக்கிறார் ; அனில் ரவிபுடி


தெலுங்கு சீனியர் நடிகர்களில் ஒருவரான வெங்கடேஷ் நடிப்பில், வரும் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கும் படம் 'சங்கராந்தி வஸ்துனம்'. இந்த படத்தை இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கியுள்ளார். இவர் மகேஷ்பாபுவை வைத்து 2020ல் 'சரிலேறு நீக்கெவரு', வெங்கடேஷை வைத்து 'எப்2' மற்றும் 'எப்3' என இரண்டு ஹிட் படங்களையும் கொடுத்தவர். கடந்த 2023ல் பாலகிருஷ்ணாவை வைத்து 'பகவந்த் கேசரி' என்கிற ஆக்சன் படத்தை கொடுத்தவர். தற்போது இந்த சங்கராந்தி வஸ்துனம் படத்தையும் கமர்சியல் ஆக்சன் படமாகவே உருவாக்கி உள்ளாராம்.

சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் அனில் ரவிபுடி பேசும்போது, “ஏற்கனவே எப்2 மற்றும் எப்3 என காமெடி டிராக்கில் பயணித்த நான் அதை விட்டு மாறுவோம் என்று தான் பகவந்த் கேசரி படம் பண்ணினேன். அதேபோல இன்னொரு படம் பண்ண வேண்டும் என்றுதான் நடிகர் சிரஞ்சீவிக்கு என ஒரு கதையை எழுதினேன். அவருக்கும் அந்த கதை பிடித்திருந்தாலும் அவர் ஏற்கனவே சில படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டதால் அவரால் இதில் நடிக்க தேதிகள் ஒதுக்க முடியவில்லை. அந்த சமயத்தில் தான் வெங்கடேஷிடம் இந்த கதையை கூறினேன். அவரும் உடனே நடிக்க சம்மதித்தார்” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !