உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பயங்கரவாதம் மனித குலத்தின் எதிரி, காஷ்மீரில் மோடி அமைதியை கொண்டு வருவார் : ரஜினி பேச்சு

பயங்கரவாதம் மனித குலத்தின் எதிரி, காஷ்மீரில் மோடி அமைதியை கொண்டு வருவார் : ரஜினி பேச்சு

மும்பை: 'பஹல்காம் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது; ஜம்மு-காஷ்மீருக்கு பிரதமர் மோடி அமைதியைக் கொண்டு வருவார்' என்று நடிகர் ரஜினி கூறினார்.

மும்பையில் 'வேவ்ஸ்' உலக ஆடியோ விஷூவல் பொழுதுபோக்கு மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மாநாட்டில் நடிகர்கள் மோகன்லால், ரஜினி, ஹேமமாலினி, சிரஞ்சீவி, அக்சய்குமார், மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்டோரும் தொழில்துறைத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், திரைத்துறையினர் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் ரஜினி பேசியதாவது: ‛‛பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது மற்றும் இரக்கமற்றது, பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு-காஷ்மீருக்கு அமைதியைக் கொண்டுவரும் ஒரு போராளி.

பொழுதுபோக்குகளில் கவனம் செலுத்துவதால், தேவையற்ற விமர்சனங்கள் காரணமாக அரசு, இந்த நான்கு நாள் நிகழ்வை ஒத்திவைக்கக் கூடும் என்று பலர் கூறினர். ஆனால் பிரதமர் மோடி மீதான எனது நம்பிக்கையின் காரணமாக இந்த நிகழ்வு நிச்சயமாக நடக்கும் என்று நான் நம்பிக்கையுடன் இருந்தேன். அதன்படியே, இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

பஹல்காம் தாக்குதல் மனிதத்தன்மையற்றது, இது முழு நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பயங்கரவாதம் என்பது மனிதகுலத்தின் எதிரி. இதை ஒழிக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும். பிரதமர் மோடி போராளி, அவர் ஜம்மு-காஷ்மீரில் நிலையான அமைதியை கொண்டுவருவார்.

இவ்வாறு ரஜினி பேசினார்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !