உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / என்னை பற்றி தவறாக பேசுகிறவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார் : யோகிபாபு

என்னை பற்றி தவறாக பேசுகிறவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார் : யோகிபாபு


பிரபாதிஷ் சாம்ஸ் என்ற புதுமுகம் இயக்கி உள்ள படம் 'கஜானா'. இனிகோ பிரபாகர், வேதிகா, யோகிபாபு நடித்துள்ளனர். இந்த படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இந்த விழாவில் பேசிய தயாரிப்பாளர் 7 லட்சம் ரூபாய் தராததால் தான் யோகிபாபு படத்தின் புரமோஷன் விழாவுக்கு வரவில்லை என்று குற்றம் சாட்டி பேசியிருந்தார். பின்னர் அவர் தனது குற்றச்சாட்டுக்கு வருத்தம் தெரிவித்து தனது புகாரை வாபஸ் பெற்றார்.

இந்த நிலையில் யோகி பாபு நடித்த இன்னொரு படமான 'ஜோரா கைய தட்டுங்க' என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட யோகி பாபு பேசியதாவது: ஒரு பட விழாவுக்கு (கஜானா) நான் வராததால் யார் யாரோ, எப்படி எப்படியோ பேசுகிறார்கள். என்னிடம் உதவியாளராக இருந்தவர் படம் எடுக்கிறாரே என்று, அவர் கேட்டுக்கொண்டதால் வெறும் 2 நாட்கள் நடித்துக்கொடுத்தேன். அந்த பட விழாவிற்கு நான் வராததால் 7 லட்சம் பணம் கேட்டதாக பேசுகிறார்கள். இந்த உண்மையை புரிந்து கொள்ளுங்கள்.

எனது சம்பளத்தை நான் தீர்மானிப்பது கிடையாது. இன்னும் சொல்லப்போனால் எனது சம்பளம் என்ன என்று கூட எனக்கு தெரியாது. வெளியே தான் தீர்மானிக்கிறார்கள். சினிமாவில் எனக்கு எவ்வளவு சம்பள பாக்கி தெரியுமா? எனக்கு எவ்வளவு பேர் பணம் தர வேண்டும் என்பது தெரியுமா? பட்டியல் தரட்டுமா? யாராவது அந்த பணத்தை வாங்கி தர முடியுமா? எதையுமே அவசரப்பட்டு பேசி விடாதீர்கள். நான் எல்லாருக்கும் சப்போர்ட் செய்கிறேன். நான் ஜாஸ்தி பேசவில்லை. என்னை பேசுபவர்கள், பேசிக்கொள்ளட்டும். அவர்களை கடவுள் பார்த்துக்கொள்வார். என்றார்.

விழாவில் பேசிய தயாரிப்பாளர் எஸ்.தாணு, ''உண்மையில் தயாரிப்பாளர்களுக்கு யோகிபாபு உதவுகிறார். அவருக்கு மனச்சோர்வு வரக்கூடாது'' ஆதரித்து பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !