கேன்ஸில் பிரதிபலித்த ‛சிந்தூர்' : பார்வையாளர்களை கவர்ந்த ஐஸ்வர்யா ராய், அதிதி ராவ்
உலகளவில் பிரபலமான சினிமா விழா பிரான்ஸில் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழா. இதில் உலகெங்கும் உள்ள திரை நட்சத்திரங்கள் பங்கேற்பர். குறிப்பாக ரெட் கார்பெட்டில் அவர்கள் அணிந்து வரும் ஆடைகளுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. இதற்காகவே திரைப்பிரபலங்கள், குறிப்பாக நடிகைகள் விதவிதமான ஆடையில் அணிவகுப்பர். இந்தாண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழா கடந்த ஒருவாரமாக நடந்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இப்பட விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் பங்கேற்று வருகிறார். அவர் அணியும் ஆடை மிகவும் பிரபலமாக இருக்கும். இந்தாண்டுக்கான விழாவில் அவர் வெள்ளை நிறத்தில் அழகிய வேலைபாடுகளுடன் கூடிய பனராஸ் புடவையை அணிந்து வந்தார். அதோடு அவரது நெற்றி வகிடுவில் திருமணமான இந்து பெண்கள் வைத்து கொள்ளும் குங்குமத்தை (சிந்தூர்) திலகமிட்டபடி சிவப்பு கம்பள வரவேற்பில் பங்கேற்றார். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ஐஸ்வர்யா ராய் இப்படி வர ஒரு காரணம் உண்டு. சமீபத்தில் பாகிஸ்தானில் பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா மேற்கொண்ட அதிரடி ஆபரேஷன் சிந்தூரை பிரதிபலிக்கும் விதமாகவே இப்படி அவர் வந்துள்ளார் என ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர்.
இவர் மட்டுமல்ல நடிகை அதிதி ராவ்வும், கேன்ஸ் பட விழாவில் சிவப்பு நிற புடவையில் நெற்றி வகிடுவில் குங்குமத்தை திலகமிட்டப்படி பங்கேற்றார். இவர்கள் இருவரின் போட்டோக்கள் வலைதளங்களில் வைரலானது.