பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா வாழ்க்கை சினிமாவாகிறது
பொதுவாக, நிஜ வாழ்க்கையில் ஜெயித்தவர்கள், சாதனைப் படைத்தவர்கள் வாழ்க்கைதான் சினிமாவாக வந்து இருக்கிறது. பாரதியார், ஈவெரா, ராமானுஜம், விஞ்ஞானி நம்பிராஜன் வாழ்க்கை அந்தவகையில் படமாக்கப்பட்டுள்ளது. ஜி.டி.நாயுடு, இளையராஜா வாழ்க்கை சினிமாவாக எடுக்கப்பட உள்ளது. இந்நிலையில், 'குட் டே' படக்குழுவினர் இது பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா வாழ்க்கை என்கிறார்கள். அவர் வாழ்க்கையில் அப்படி என்ன இருக்கிறது என்று கேட்டால் அவர் ஒரு காலத்தில் குடிகாரராக இருந்தார்.
சரக்கு அடித்துவிட்டு சட்டையை கழட்டிவிட்டு, ஹெல்மெட் மாட்டிக்கொண்டு 'உலகத்தை மாற்றப்போகிறேன்' என்று பஸ்சில் செல்லும் அளவுக்கு ரவுசு செய்தார். இப்போது மாறிவிட்டார். 'குட் டே' படம் ஒரு குடிகாரனின் கதை, ஒரு இரவில் திருப்பூரில் நடக்கும் சம்பவம். அதனால், கார்த்திக் நேத்தாவை அழைத்து அவர் வாழ்க்கை சம்பவங்களை கேட்டோம். அதிலிருந்து பல சீன்களை வைத்து இருக்கிறோம். ஆனாலும், படம் பாசிட்டிவ்வான விஷயத்தை பேசுகிறது என்கிறார்கள். இந்த படத்துக்கு கார்த்திக் நேத்தா பாடல் எழுதியுள்ளார்.
அவர் கூறுகையில் ''இது என்னுடைய 100வது படம் என்பதில் பெருமை. சிம்பு நடித்த 'தொட்டி ஜெயா' படத்தில் பாடல் எழுத ஆரம்பித்தேன். இந்த ஊரு எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்குது என்னுடைய முதல் படம். இதுவரை 170க்கும் அதிகமான பாடல்கள் எழுதிவிட்டேன்'' என்கிறார். குட் டே படத்தை அரவிந்தன் இயக்க, பிருத்விராஜ் ராமலிங்கம் ஹீரோவாக நடித்துள்ளார். இவர் '96, மெய்யழகன்' படங்களின் இணை இயக்குனர்.