உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / போதைப் பொருள் வழக்கு : தமிழ்த் திரையுலகில் பரபரப்பு…

போதைப் பொருள் வழக்கு : தமிழ்த் திரையுலகில் பரபரப்பு…

தமிழ்த் திரையுலகத்தில் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு அடுத்து நடிகர் கிருஷ்ணாவுக்கு விசாரணைக்கு வர போலீஸ் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தற்போது தமிழ்த் திரையுலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு கடந்த வருடம் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக், போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்போது தமிழ்த் திரையுலகத்திலிருந்து இயக்குனர், நடிகர் அமீர் மட்டுமே விசாரிக்கப்பட்டார்.

ஆனால், இப்போது ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோரைத் தவிர இன்னும் 10 நடிகர்கள், நடிகைகள் வரையில் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களிடம் இன்னும் விசாரணை நடந்த பிறகே அது குறித்த உண்மைகள் வெளிவரலாம். டாப் நடிகர், நடிகையர் கூட சிக்க வாய்ப்புள்ளதாக பரபரப்பு எழுந்துள்ளது.

இதற்கு முன்பு, ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடத் திரையுலகங்களில் இந்த போதை விவகாரத்தில் சில பல நடிகர்கள், நடிகைகள் விசாரணையில் சிக்கினர். சிலர் கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் வெளிவந்துள்ளனர்.

பார்ட்டி கலாச்சாரம் என்பது மற்ற மொழி சினிமாவை விட தமிழ் சினிமாவில் குறைவுதான் என்கிறார்கள். இருந்தாலும் சில நடிகர்கள், நடிகைகள் அடிக்கடி இப்படியான பார்ட்டிகளில் கலந்து கொள்வதை வழக்கத்தில் வைத்துள்ளார்கள். சில வருடங்களுக்கு முன்பு கூட ஒரு பிரபல பின்னணிப் பாடகி இது குறித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இன்னும் ஓரிரு வாரங்களுக்கு தமிழ் நடிகர்கள், நடிகைகள் பற்றிய இந்த போதைப் பொருள் விவகாரம் அனைத்து தளங்களிலும் பரபரப்பான செய்தியாக வலம் வரும்.

கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு
இதனிடையே போதைப் பொருள் வழக்கில் தொடர்புடைய நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவர் கேரளாவில் படப்பிடிப்பில் இருப்பதாக தகவல். இருப்பினும் அவரின் அலைப்பேசி அனைத்து வைக்கப்பட்டு இருப்பதால் சைபர் கிரைம் நிபுணர்கள் மூலம் அவர் இருப்பிடத்தை கண்டறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !