சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ்
கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் கிச்சா சுதீப் ஒரு பக்கம் சினிமா, இன்னொரு பக்கம் சின்ன திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சி என தொடர்ந்து பிசியான நடிகராக வலம் வருகிறார். அவரது நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வந்த பில்லா ரங்கா பாஷா திரைப்படத்தை இந்த வருடத்திற்குள் முடித்து ரிலீஸ் செய்ய வேண்டும் என்கிற திட்டம் அவரிடம் இருந்தது. அதை சில பேட்டிகளிலும் கூறி இருந்தார். திடீரென எதிர்பாராத அறிவிப்பாக அவரது 47வது படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கடந்த வருடம் சுதீப் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற மேக்ஸ் திரைப்படத்தின் இயக்குனர் விஜய் கார்த்திகேயா தான் இந்த படத்தையும் இயக்குகிறார். இந்த படம் குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள சுதீப், “இந்த வருடத்திற்குள் என்னுடைய படம் ஒன்று வெளியாக வேண்டும். ஒரே வீச்சில் இதன் படப்பிடிப்பை முடித்து டிசம்பரில் கிறிஸ்துமஸில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறோம்.. பில்லா ரங்கா பாஷா மிகப்பெரிய பட்ஜெட் செலவில் எடுக்கப்பட்டு வருவதால் அதை முடிக்க இன்னும் கொஞ்ச காலம் பிடிக்கும். அதற்குள் ஒரு படத்தை இந்த வருடத்தில் ரிலீஸ் செய்யும் எண்ணத்தில் தான் இந்த படத்தை துவங்கியுள்ளோம்” என்று கூறியுள்ளார்.