உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: லதா மங்கேஷ்கர் பாடலை புறக்கணித்த தமிழ் சினிமா

பிளாஷ்பேக்: லதா மங்கேஷ்கர் பாடலை புறக்கணித்த தமிழ் சினிமா

இந்திய சினிமாவின் மிகப்பெரிய ஆளுமை லதா மங்கேஷ்கர். இந்திய மொழிகள் அனைத்திலும் பாடி உள்ளார். தமிழில் முதன் முறையாக 1955ம் ஆண்டு 'வானரதம்' என்ற படத்தில் பாடினார். இது இந்தி படத்தின் டப்பிங்.

நேரடி தமிழ் படம் என்றால் அது பிரபு நடித்த 'ஆனந்த்' என்ற படம். இந்த படத்தில் லதா மங்கேஷ்கர் இளையராஜா இசையில் 'ஆராரோ ஆராரோ' என்ற பாடலை பாடினார். பின்னர் 'சத்யா' படத்தில் 'வளையோசை' பாடலை பாடினார். 'என் ஜீவன் பாடுது' படத்திற்காக எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன்' என்ற பாடலை பாடினார். இப்படி ஆங்காங்கே ஒரு சில பாடலை பாடினார்.

அவர் பாடலை புறக்கணித்த நிகழ்வும் உண்டு. இந்திய சினிமாவின் முதல் டெக்னிக் கலர் படம் 'ஆன்'. மெஹமூத் கான் இயக்கி இந்த படத்தில் திலீப் குமார், நிம்மி, நதிரா, பிரேம்நாத் உள்ளிட்ட பலர் நடித்தனர். அந்த காலத்திலேயே 30 லட்சம் செலவில் தயாரிக்கப்பட்டு 30 கோடி வசூலித்த படம். இந்தியாவின் பல மொழிகளில் டப் செய்யப்பட்ட படம்.

இந்த படம் தமிழில் இதே பெயரில் டப் செய்யப்பட்டது. நவுசாத் இசையில் 10 பாடல்கள் இடம்பெற்றிருந்தது. 10 பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. இதில் பெண் குரலில் லதா மங்கேஷ்கரும், சம்ஷாத் பேகமும் பாடி இருந்தார்கள். இந்த படம் தமிழில் டப் செய்யும்போது தமிழ் பாடல்களையும் இவர்களே பாடினார்கள்.

தமிழ் பாடல் வரிகளை கம்பதாசன் எழுதியிருந்தார். ஆனால் பாடல்கள் பதிவு செய்யப்பட்ட பிறகு இந்த பாடல்களில் தமிழ் உச்சரிப்பு சரியில்லை. மக்கள் கேலி செய்வார்கள் இதனால் பாடல்களை மறுபதிவு செய்ய வேண்டும் என்று கம்பதாசன் உள்ளிட்ட பலரும் கருத்து கூறினார்கள்.

இதன் காராணமாக லதா பாடிய பாடல்களை, எம்.எஸ்.ராஜேஸ்வரியும், சம்ஷாத் பேகம் பாடிய பாடல்களை சூலமங்கலம் சகோதரிகளும் பாடி மறு பதிவு செய்யப்ட்டது. படமும், பாடல்களும் தமிழ் நாட்டிலும் ஹிட் ஆனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !