இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு வரும் அனுஷ்கா
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் அனுஷ்கா. 2015ல் வெளிவந்த 'பாகுபலி' படத்தின் முதல் பாகத்திற்குப் பிறகு நிறைய படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த 10 வருடங்களில் அவர் நடித்த 9 படங்கள் மட்டுமே வெளிவந்தன. அவற்றில் தமிழ், தெலுங்கில் தயாரான 'தோழா, பாகமதி' ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வரவேற்பைப் பெற்றன.
அவர் நடித்து கடைசியாக 2023 செப்டம்பரில் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்' படம் வெளிவந்து வெற்றி பெற்றது. அதற்குப் பிறகு அவர் 'காட்டி' தெலுங்குப் படத்தில் நடித்து வந்தார். கிரிஷ் இயக்கத்தில் அனுஷ்கா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க, விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. அடுத்த மாதம் செப்டம்பர் 5ம் தேதி இப்படம் பான் இந்தியா படமாக தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.
இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு அனுஷ்கா நடித்துள்ள ஒரு படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை அடுத்து மலையாளத்தில் அவர் நடித்துள்ள 'கதனார்' படம் வர உள்ளது.