உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இட்லி கடை பட டப்பிங் பணிகளை நிறைவு செய்த பார்த்திபன்

இட்லி கடை பட டப்பிங் பணிகளை நிறைவு செய்த பார்த்திபன்

நடிகர் தனுஷ் இயக்கி, நடித்து வரும் படம் 'இட்லி கடை' . டான் பிக்சர்ஸ், வுண்டர்பார் பிலிம்ஸ், ரெட் ஜெயண்ட் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர். ராஜ்கிரண், அருண் விஜய், நித்யா மேனன் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வருகின்ற அக்டோபர் 1ம் தேதியன்று திரைக்கு வருகிறது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பார்த்திபன் அவரது சமூக வலைதள பக்கத்தில் இட்லி கடை படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு பெற்றதை குறித்து பதிவிட்டுள்ளார். அதன்படி, இன்னொரு தேசிய விருது வாங்கி இருக்க வேண்டிய 'ஆடுகளத்தில் நான் நடிக்க முடியாமல் போனதும், இணைந்து நடித்த ' சூதாடி' இடையில் நின்று போனதும், இவையாவையும் ஈடு கட்டும் விதமாக 'இட்லி கடை'யில் ஒரு சிறு மினி இட்லியாக கவுரவ வேடத்தில் நடிக்க அவரே அழைத்த போது, மறுக்காமல் ஒப்புக் கொண்டேன். நேற்று டப்பிங் நிறைவு பெற்றது. இரும்பினும் சக்தி கொண்ட இதயத்தோடு, எறும்பினும் சுறுசுறு உழைப்போடு, சகலகலா வல்லவனாக, அகில இந்திய நட்சத்திரமாக தனுஷ் மிளிரினால் (மிருனாள் எனத் தவறாக வாசித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல, ஏனெனில் அது தான் பிசுபிசுத்த கிசுகிசுவாய் போய் விட்டதே)அது ஆச்சர்யமில்லை என்பதை கண் கூடாகக் கண்டேன் இட்லி கடையில். அக்டோபரில் வெந்து விடும், மன்னிக்க, வந்து விடும்!!! என பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !