உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகர் சங்கத்தில் மீண்டும் சேருவேனா ? நடிகை பாவனா பதில்

நடிகர் சங்கத்தில் மீண்டும் சேருவேனா ? நடிகை பாவனா பதில்


மலையாள திரையுலக நடிகர் சங்கத்திற்கு சமீபத்தில் புதிய தேர்தல் நடைபெற்றது. இந்த முறை முதன்முறையாக ஒரு பெண் தலைவராக நடிகை ஸ்வேதா மேனன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த சில வருடங்களாக இயங்கிவந்த நடிகர் சங்க நிர்வாகத்தின் மீது அதிருப்தியில் இருந்த பலர் குறிப்பாக சில முன்னணி நடிகைகள் சிலர் நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேறினார்கள். அந்த வகையில் கடந்த 2017ல் தனக்கு ஏற்பட்ட ஒரு பாதிப்புக்கு நடிகர் சங்கம் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டிய நடிகை பாவனா நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேறினார்.

தற்போது புதிய தலைவராக பொறுப்பேற்றிருக்கும் ஸ்வேதா மேனனிடம் அவரை மீண்டும் நடிகர் சங்கத்திற்கு அழைத்து வர முயற்சி எடுக்கப்படுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஸ்வேதா மேனன் அவர் மட்டுமல்ல, நடிகர் சங்கத்திலிருந்து பல காரணங்களால் விலகிச் சென்ற அனைவரையுமே சங்கத்திற்கு மீண்டும் வரவேற்கிறோம். அவர்களை அழைத்து வர முயற்சிப்போம். ஆனால் அது ஒரே மீட்டிங்கில் முடியுமா என்பது சொல்ல முடியாது. கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட மீட்டிங்குகள் நடத்திய பிறகு தான் தெரிய வரும். ஆனால் தற்போதைய முக்கிய அஜண்டா அதுவா என்றால் இல்லை என்று கூறியிருந்தார்.

இது குறித்து நடிகை பாவனாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “நான் நடிகர் சங்கத்தில் பல வருடமாக உறுப்பினராக இல்லை. அதனால் தற்போது நடிகர் சங்கத்தில் நடைபெற்ற மாற்றம் குறித்து எனக்கு தெரியவில்லை. சூழல் ஏற்பட்டால் அது குறித்து பேசுவேன்” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !