கலைமாமணி விருது : ஜெயப்பிரியா விக்ரமன் நெகிழ்ச்சி
‛புது வசந்தம்' தொடங்கி ‛பூவே உனக்காக, சூர்யவம்சம், வானத்தை போல' உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் விக்ரமன். இவரது மகன் விஜய் கனிஷ்காவும் இப்போது நடிகராக களமிறங்கி உள்ளார். இவரது மனைவி ஜெயப்பிரியா விக்ரமன், பிரபல குச்சுப்பிடி நடனக்கலைஞர் ஆவார். ஏராளமான மேடைக் கச்சேரிகள், கோயில்கள், பல வெளிநாடுகளில் தனது நடனத்தை அரங்கேற்றம் செய்துள்ளார். 365 நாளும் ஓய்வில்லாமல் ஆடிய இவரது கால்கள் கடந்த சில ஆண்டுகளாக எழுந்து கூட நடக்க முடியாமல் படுத்த படுக்கையில் உள்ளார். இவரது உடலில் ஏற்பட்ட பிரச்னைக்கு சிகிச்சை மேற்கொண்டவர் அதில் ஏற்பட்ட குளறுபடியால் நடக்க முடியாத சூழலில் உள்ளார்.
இந்நிலையில் தமிழக அரசு இவருக்கு ‛கலைமாமணி விருது' அறிவித்துள்ளது. 2023ம் ஆண்டுக்கான நாட்டிய பிரிவில் இவர் இந்த விருதை பெறுகிறார். இதுகுறித்து தினமலர் இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டி...
‛‛மூன்றரை ஆண்டுகளுக்கு மேல் படுத்த படுக்கையாக உள்ளேன். உடல் அசைவு இல்லை. கோயில்கள், மேடைக்கச்சேரிகள் என உள்ளுர் முதல் உலக நாடுகள் வரை 365 நாளும் குச்சுப்பிடி நடனம் ஆடியவள் நான். மருத்துவ குளறுபடியால் என் உடல்நிலை இப்படி ஆனது. இதுவரை எனக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கவில்லை. இந்த விருது என்னை திரும்ப எழுந்து உட்கார வைத்த உணர்வை தருகிறது. தமிழக அரசுக்கும், தேர்வுக் குழுவிற்கும் நன்றி''.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.