கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன்
நடிகராக இருந்த ரவி மோகன் சமீபத்தில் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் மாறினார். தற்போது பாடலாசிரியராகியிருக்கிறார். “என் வானம் நீயே” என்ற இசை ஆல்பத்திற்கு பாடல் எழுதியுள்ளார்.
ஒரு தாயின் அன்பின் ஆழத்தையும், சொலப்படாத உணர்ச்சிகளையும் கொண்ட பாடல் இது. ஒவ்வொரு தாயும் நம் வாழ்க்கையில் ஊற்றும் அந்த அமைதியான ஆசீர்வாதங்களின் பிரதிபலிப்பாக இந்த பாடல் ஆல்பம் உருவாகி உள்ளது.
இதுகுறித்து இசையமைப்பாளர் மற்றும் பாடகி கெனிஷா கூறுகையில், “இந்தப் பாடல் என் இதயத்திலிருந்து வந்தது.'என் வானம் நீயே' உருவாக்கும் போது என் தாயை நினைத்துக் கொண்டே இருந்தேன். தாய்மார்கள் எப்படியெல்லாம் நம்மை வானம் போல காத்துக் கொள்கிறார்கள் என்பதைக் குறித்தே இந்த பாடலை அமைத்துள்ளோம். இது வெறும் ஒரு இசை அல்ல, நம்மில் ஒவ்வொருவருக்கும் உள்ள ஒரு உணர்ச்சி. இந்த மெலடியை கேட்பவர் ஒவ்வொருவரும் தங்களது தாயின் அன்பையும் அர்ப்பணிப்பையும் உணருவார்கள் என்று நம்புகிறேன், என்றார்”.
பாடலாசிரியர் ரவி மோகன் கூறுகையில், முதல் முறையாக எழுதுவது என்பது எனது மனதின் மிக ஆழமான பகுதியைத் திறந்தது போல இருந்தது. 'என் வானம் நீயே' என் தாயிடமிருந்து வந்த சிறிய அதிசயங்களின் பிரதிபலிப்பு. அன்றாட வாழ்வின் அன்பான, கவனிக்கப்படாத தருணங்கள் வாழ்க்கையை எவ்வளவு அழகாக்குகின்றன என்பதைக் குறித்த பாடல். அந்த நன்றி, அந்த பாசத்தை மிக நேர்மையான, எளிமையான சொற்களில் வெளிப்படுத்த வேண்டுமென்றே இதை எழுதினேன். இது எல்லா தாய்மார்களுக்கும், குறிப்பாக என் தாய்க்கும் எனது இதயபூர்வமான வணக்கமாக சமர்ப்பிக்கிறேன். என்றார்.
ரவி மோகன் ஸ்டூடியோ இதனை வெளியிட்டுள்ளது.