8 மணி நேரம்தான் நடிப்பேன் : ராஷ்மிகா சொல்வது சரியா, சாத்தியமா?
இனி, 8 மணி நேரம் மட்டுமே நடிப்பேன். எனக்கும் துாக்கம், உடற்பயிற்சி, ஓய்வு, குடும்பத்துக்கு நேரம் ஒதுகக்குவது முக்கியம் என்று பேட்டி கொடுத்து இருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. இந்த கருத்துக்கு சினிமாவில் ஆதரவு எழுந்தாலும், விமர்சனங்களும் வந்துள்ளன.
சினிமாவை பொறுத்தவரையில் நேரம் காலம் கிடையாது. ஒரு காட்சி அமைப்புக்கு ஏற்ப, சூழ்நிலை, மற்ற நடிகர்கள் கால்ஷீட், லைட்டிங் ஏற்ப நடிகர்கள் நடிக்க வேண்டும். உள்ளூர், வெளியூர், வெளிநாடு என அனைத்து இடங்களிலும், இரவு, பகல் பார்க்காமல் நடிக்க வேண்டும். அப்போதுதான் சினிமாவை முழுமையாக எடுக்க முடியும். அதிலும் ஹீரோயின்கள் ஒரு படத்தில் கொஞ்ச காலமே நடிப்பார்கள். அவர்களுக்கு தொடர்ச்சியாக படப்பிடிப்பு இருக்காது. பாடல்காட்சி மட்டுமே கொஞ்சம் சிரமம் இருக்கும். அதிலும் ராஷ்மிகா மாதிரியான ஹீரோயின்களுக்கு பிரஷர் இருக்காது. அவர்களை இவ்வளவு நேரம் நடி, ஓய்வில்லாமல் நடி என யாரும் பிரஷர் கொடுக்கமாட்டார்கள்.
சில வாரங்கள் கால்ஷீட்டுக்காக ராஷ்மிகா வாங்கும் சம்பளம் பல கோடி. இதே சினிமாவில் அடிமட்ட தொழிலாளர்கள், பெண்கள் சில நுாறு சம்பளத்துக்கு கடுமையாக உழைக்கிறார்கள். அவர்கள் நேரம் குறித்து பேசியது இல்லை. அப்படி பேசினால் வேலை கிடைக்காது. ஒரு நடிகரை தொடர்ச்சியாக வேலை வாங்கக்கூடாது என்பது உண்மைதான். ஆனால், நான் 8 மணி நேரம் மட்டுமே நடிப்பேன் என்று சொல்வது ஓவர். இது ஆபீஸ் வேலை அல்ல. அவர் அந்த நேரம் முடிந்தவுடன் ஓட்டலுக்கு சென்றுவிட்டால், அந்த பட காட்சி பாதிக்கப்படும், மற்ற நடிகர்களின் கால்ஷீட் வீணாகும். அதனால், பல கோடி இழப்பு ஏற்படும்.
இந்திய சினிமாவில் முன்பெல்லாம் இப்படி யாரும் பேசியது இல்லை. சினிமாவை குறித்து உணர்ந்துதான் நடிக்க வருகிறார்கள். இப்போது தீபிகா படுகோனேவை தொடர்ந்து ராஷ்மிகாவும் இப்படி பேசியிருப்பது சரியில்லை. அவருக்கு இஷ்டம் இருந்தால், அவர் கொள்கை படி நடிக்கலாம். ஆனால், அவருக்கான வாய்ப்பு பறி போய்விடும். அந்த இடத்துக்கு வர ஏகப்பட்ட போட்டி நடிகைகள் இருக்கிறார்கள் என்கிறார்கள்.