சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு
சத்யா, அண்ணாமலை, பாட்ஷா உள்ளிட்ட படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இயக்கி உள்ள ஆன்மிக படம் ‛அனந்தா'. ஜெகபதி பாபு, சுஹாசினி மணிரத்னம், ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய், ஸ்ரீ ரஞ்சனி, அபிராமி வெங்கடாசலம் மற்றும் பலர் நடித்துள்ளனர். பா. விஜய் வசனம் மற்றும் பாடல்களை எழுத, தேவா இசையமைத்துள்ளார்.
வலியை அமைதியாக மாற்றும் நம்பிக்கையை மையமாகக கொண்ட யதார்த்தம், உணர்ச்சி மற்றும் தெய்வீக ஆற்றல் ஆகியவற்றை கலந்து ஐந்து ஆழமான, மனதை நெகிழ வைக்கும் கதைகளை இப்படம் வழங்குகிறது. மீண்டும் எழும் ஒரு நடன கலைஞர், இழப்பில் கருணையை கண்டறியும் ஒரு மனிதன், ஒரு அற்புதத்தை காணும் தாய், இயற்கையின் அமைதியில் நம்பிக்கையை கண்டறியும் ஒரு வெளிநாட்டவர் மற்றும் கண்ணுக்கு தெரியாத அருளால் காப்பாற்றப்படும் ஒரு தொழிலதிபர். இவர்களை சுற்றியே இந்த படம் உருவாகி உள்ளது.
இப்படம் ஒவ்வொரு மனித வாழ்விலும் வழிகாட்டும் கண்ணுக்கு தெரியாத அருளை படம்பிடித்து காட்டும். அனந்தா ஒரு வழக்கமான பக்தி படம் அல்ல..! இது வாழ்க்கை, அன்பு மற்றும் இறைவனின் காணமுடியாத கிருபையை கொண்டாடும் ஒரு திரைக்காவியம் என்றே சொல்லலாம்.
இப்படத்தின் தமிழ் உலகளாவிய விநியோக உரிமையை ஏபி இன்டர்நேஷனல் நிறுவனம் பெற்றுள்ளது. சத்ய சாய் பாபாவின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு, இப்படம் வரும் 2025 நவம்பர் 23 முதல் டிஜிட்டல் தளத்தில் வெளியாகவுள்ளது.