‛ப்ரோ கோட்' டைட்டில் விவகாரம் ; ரவி மோகன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
நடிகர் ரவி மோகன் புதிதாக தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி ‛ப்ரோ கோட்' என்கிற படத்தை தயாரிக்கிறார். கார்த்திக் யோகி என்பவர் இயக்கும் இந்த படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடிக்கிறார். ஆனால் மிகப்பெரிய ஆல்கஹால் தயாரிப்பு நிறுவனம் ஒன்று தாங்கள் ப்ரோ கோட் என்கிற பெயரில் மது விற்பனை செய்து வருவதால் இந்த பெயரை டைட்டிலாக பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும்படி வழக்கு தொடர்ந்தது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த பெயரை டைட்டிலாக பயன்படுத்துவதில் தடை இல்லை என்று கூறியது.
ஆனாலும் டில்லி உயர் நீதிமன்றத்தில் இதற்கு எதிராக சம்பந்தப்பட்ட மதுபான நிறுவனம் வழக்கு தொடர்ந்து. இந்த டைட்டிலை ரவி மோகன் எந்த வகையிலும் பயன்படுத்த இடைக்கால தடை வாங்கி உள்ளது. இந்த நிலையில் இந்த தடையை பெற்ற பின்னரும் அந்த பெயரை ரவி மோகன் தரப்பு பயன்படுத்துவதை நிறுத்தவில்லை என்றும் இந்த படத்திற்காக பயன்படுத்தப்பட்ட புரோ கோட் என்கிற பெயர்களை எங்கேயும் நீக்கவில்லை இது நீதிமன்ற உத்தரவை அவமதிப்பதாகும் என்றும் கூறி அவர் நிறுவனம் மீது புதிய வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளது.