உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காமராஜாரை இழிவுபடுத்துகிறது: 'தேசிய தலைவர்' படத்திற்கு தடைகேட்டு வழக்கு

காமராஜாரை இழிவுபடுத்துகிறது: 'தேசிய தலைவர்' படத்திற்கு தடைகேட்டு வழக்கு


'தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள்' என்ற கொள்கையுடன் வாழ்ந்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். அவரது வாழ்க்கை வரலாறு 'தேசிய தலைவர்' என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது. 'ஊமை விழிகள்' படத்தை இயக்கிய ஆர்.அரவிந்தராஜ் இயக்கி இருந்தார், பஷீர் என்பவர் முத்துராமலிங்க தேவராக நடித்திருந்தார்.

இந்த படத்தில் தேவர் வாழ்க்கையோடு தொடர்புடைய காந்தி, நேரு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், காமராஜர் போன்ற தலைர்களின் கேரக்டர்களும் இடம்பெற்றிருந்தது. படம் வெளியாகி பல நாட்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது இந்த படம் காமராஜரை இழிவுபடுத்துவதாகவும், படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சத்திரிய சான்றோர் படை நிறுவன தலைவர் ஹரிநாடார் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், 'கடந்த அக்டோபர் 30ம் தேதி வெளியான தேசிய தலைவர் தேவர் பெருமான் திரைப்படத்தில் முன்னாள் முதல்வர் காமராஜர் குறித்து எந்த ஆதாரங்களும் இல்லாமல், அவமதிக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இரு சமூகத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில், காமராஜரை தவறாக சித்தரித்து காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, தேசிய தலைவர் தேவர் பெருமான் படத்திற்கு தடை விதிக்குமாறு உத்தரவிட வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், இதற்கு விளக்கம் கேட்டு அரசு தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !