வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா
நடிகை ஆண்ட்ரியா தயாரிப்பாளர் ஆகிவிட்டார். 'மாஸ்க்' என்ற படத்தை தயாரித்து, அவரும் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கிறார். கவின் ஹீரோ.
தயாரிப்பாளர் ஆனது குறித்து அவர் கூறியது: இதுவரை 35க்கும் அதிகமான படங்களில் நடித்துவிட்டேன். இந்த கதை நன்றாக இருந்ததால், நானும், சொக்கு என்பவரும் இணைந்து தயாரிக்கிறோம். வெற்றிமாறன் படத்தை தயாரிக்கவில்லை. அவர் அட்வைஸ் செய்கிறார். கிரியேட்டிவ் தயாரிப்பாளர். 'இத்தனை ஆண்டுகள் கஷ்டப்பட்டு சம்பாதித்து வீடு கட்டினாய், அதை வைத்து லோன் வாங்கி படம் தயாரிக்க வேண்டுமா? நீ பைத்தியமா?' என்று பலரும் கேட்டார்கள். சினிமாவில் சம்பாதித்துதானே அதை வாங்கினேன் என்றேன்.
நான் நடித்த 'மனுசி, பிசாசு 2' படங்கள் வராதது வருத்தம். நான் ஹீரோயினாக நடித்த இன்னொரு படம் தியேட்டருக்கு வரவில்லை. என் திறமையை காண்பிக்க இந்த படம் என்று கூட சொல்லலாம். கதையும் நன்றாக இருந்ததால் தயாரிப்பில் இறங்கிவிட்டேன். இந்த படம் வெற்றி பெற்று லாபம் வந்தால், மிஷ்கின் இயக்கத்தில், என் நடிப்பில் முடங்கி இருக்கும் 'பிசாசு 2' படத்தை வெளியிட முயற்சி செய்வேன்.
நடிப்பு, தயாரிப்பு பணிகளை விட, பாடுவதுதான் எனக்கு பிடித்து இருக்கிறது. ராம், வெற்றிமாறன், கவுதம்மேனன், மிஷ்கின் இயக்கத்தில் நடித்து இருந்தாலும், 'ஆயிரத்தில் ஒருவன்' படத்துக்குதான் மிகவும் கஷ்டப்பட்டேன். அந்த படத்தில் பல காட்சிகள் 26 டேக்வரை எடுக்கப்பட்டது. மாஸ்க் படத்தில் கவின் நடிப்பு நன்றாக இருக்கும். 'வட சென்னை'யின் இன்னொரு பகுதியாக 'அரசன்' எடுக்கப்படுகிறது. அதில் நான் நடிக்கலாம். '' இவ்வாறு அவர் கூறினார்.