4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3'
இந்திய ஓடிடி தள வெப் தொடர்களில் மிகப்பெரிய வெற்றி பெற்ற தொடர் 'தி பேமிலி மேன்'. அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான இதன் முதல் இரண்டு சீசன்களும் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த தொடர்கள் மூலம் ராஜ்-டிகே இரட்டை இயக்குனர்கள் புகழ்பெற்றனர்.
முதல் சீசனில் பிரியாமணியும், இரண்டாவது சீசனில் சமந்தாவும் கலக்கியது தென்னிந்திய ரசிகர்களை ஈர்த்தது. நடுத்தர வர்க்கத்து குடும்பத் தலைவன் இந்திய நாட்டை காக்கும் உளவாளியாக இருந்து சந்திக்கும் சவால்களை மிகவும் இயல்பாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லிய விதத்தில் இந்த தொடர் மக்களை கவர்ந்தது.
தற்போது 4 வருட இடைவெளிக்கு பிறகு இதன் 3வது சீசன் நேற்று (நவ.21) அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாகி உள்ளது. உளவாளி மற்றும் பேமிலி மேன் ஸ்ரீகாந்த் திவாரியாக மீண்டும் மனோஜ் பாஜ்பாய் நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் ஜெய்தீப் அஹ்லாவத் வில்லனாக அறிமுகமாகியுள்ளார்.
முதல் பாகத்தில் காஷ்மீர் கதை களமாகவும், இரண்டாவது பாகத்தில் இலங்கை கதை களமாகவும் இருந்தது. இந்த பாகத்தில் வடகிழக்கு மாநிலங்கள் கதை களமாக உள்ளது. வெளிநாட்டு அரசியலை பேசிய தொடர், இந்த சீசனில் உள்நாட்டு அரசியலை பேசுகிறது.