காந்தாரா கிண்டல்: மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்
கோவாவில் நடந்த 56வது சர்வதேச திரைப்பட விழாவின் கடைசி நாளில் கலந்துகொண்ட பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் 'காந்தாரா' படத்தின் இயக்குனரும், ஹீரோவுமான ரிஷப் ஷெட்டியுடன் மேடையில் தோன்றி உரையாடினார். அப்போது படத்தின் கிளைமாக்ஸை பாராட்டிய ரன்வீர் சிங், அதில் வரும் தெய்வத்தை 'பெண் பேய்' என்று குறிப்பிட்டதுடன், படத்தில் ரிஷப் ஷெட்டி 'ஓ....' என ஆங்கார கூச்சலிடுவது போன்று ரன்வீரும் கூச்சலிட்டு கிண்டல் செய்தார்.
ரன்வீர் சிங்கின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்புகள் உருவானது. துளு மக்களின் குல தெய்வமான சாமுண்டியை பெண் பேய் என்று கிண்டல் செய்ததோடு, அதன் ஆங்கார குரலையும் இழிவுபடுத்திவிட்டதாக கூறப்பட்டது. ரன்வீர் சிங்கின் செயல் இந்து மக்களை புண்படுத்திவிட்டதாக இந்து ஜனஜாக்ருதி சமிதி அமைப்பினர் பனாஜி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், 'புனிதமான தெய்வத்தை பேய் என்று சொன்னதன் மூலம், கோடிக்கணக்கான மக்களின் மத உணர்வுகளை ரன்வீர் சிங் காயப்படுத்தியுள்ளார். எனவே, அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரன்வீர் சிங் தனது செயலுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். ரிஷப்பின் அற்புதமான நடிப்பை போற்றுவதே என் நோக்கம். அவர் மீது எனக்கு மரியாதை உண்டு. நாட்டின் கலாசாரம், பாரம்பரியம், மத நம்பிக்கைகளை பெரிதும் மதிப்பவன் நான். யாருடைய மனதையும் நான் புண்படுத்தியிருந்தால், மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறி பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.