இயக்குனர் ஏ.வெங்கடேசை தெரியாது என சொன்ன பாலா.. ராஜூமுருகன் சைக்கோவா? சசிகுமார் பதில்...
ராஜூமுருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா நடித்த 'மை லார்ட்' படத்தின் பாடல் வெளியீட்டுவிழா சென்னையில் நடந்தது. இதில் இயக்குனர்கள் பாலா, லிங்குசாமி, த.செ.ஞானவேல், மாரிசெல்வராஜ், ஏ.வெங்கடேஷ் உட்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய பாலா, சசிகுமாரின் டான்சை, ஹீரோயின் சைத்ராவின் நடிப்பை பாராட்டினார். சசிகுமார் தனது சிஷ்யன் என்பதில் பெருமை என்றார். அப்போது மேடையில் பேசிய ஏ.வெங்கடேசை தனக்கு தெரியாது என்றும் அவரது படங்கள் பார்த்தது இல்லை என்றும், ஆனால், இப்போது மாரிசெல்வராஜ்தான் தனக்கு வழிகாட்டி என்றும் அவர் படத்தை பாராட்டினார் பாலா. இது பலரையும் வியக்க வைத்தது.
'ஏய், பகவதி, மகாபிரபு, சாக்லெட், குத்து' உட்பட பல கமர்ஷியல் படங்களை இயக்கிய ஏ.வெங்கடேசை உண்மையில் பாலாவுக்கு தெரியாதா? அல்லது கலாய்த்தாரா என்று பார்வையாளர்கள் முணுமுணுத்தனர். மேடையில் இப்படி பாலா ஓபனாக பேசியதால் ஏ.வெங்கடேஷ் அவமானப்பட்டார்.
அதேபோல் சசிகுமார் பேசுகையில் ''இயக்குனர் ராஜூமுருகன் ஒரு சைக்கோ என பலரும் என்னிடம் சொன்னார்கள். நான் பல நாட்கள் அவரிடம் பணியாற்றினேன். அவர் அப்படிப்பட்டவர் அல்ல, அவர் சினிமா மீது காதலாக இருக்கிறார். அவரை பற்றி அப்படி சொன்னவர்கள் தான் சைக்கோ'' என்றார்.
அதேபோல், விழாவில் பேசிய பாலா இந்த படத்தை தயாரித்தவர் அம்பேத்குமார் எம்எல்ஏ (வந்தவாசி திமுக எம்எல்ஏ). இந்த மாதிரி வரிசையாக சில படங்கள் தயாரித்தால், அவர் அமைச்சர் ஆகிவிடுவார். அதை தலைமை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றார். ராஜூமுருகனை வைத்து 'ஜிப்ஸி' படமெடுத்தவர் அம்பேத்குமார். ஜீவா நடித்த அந்த படம் பிளாப் ஆனது. ஆனாலும், ராஜூமுருகன் நட்புக்காக மைலார்ட் படத்தை அவர் தயாரித்து இருக்கிறார். பிப்ரவரி 13ல் படம் ரிலீஸ் ஆகிறது.