24வது வருட காதலர் தினம் : ஜெனிலியாவுக்கு பாராட்டு பத்திரம் வாசித்த கணவர்
நடிகை ஜெனிலியா பாலிவுட்டில் இருந்து தமிழுக்கு வந்து சந்தோஷ் சுப்பிரமணியம், சச்சின் உள்ளிட்ட பல படங்களில் தனது குழந்தைத்தனமான நடிப்பால் வெகுவாக ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2012ல் பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டார் ஜெனிலியா. அதற்கு முன்னதாகவே இவர்கள் 10 வருடம் காதலித்து வந்தார்கள். குறிப்பாக 2002ல் பாலிவுட்டில் துவங்கிய துஜே மேரி கசம் என்கிற படப்பிடிப்பிலிருந்து இவர்கள் காதல் துவங்கியது.
இந்த நிலையில் தங்கள் காதல் 24வது வருடத்தை எட்டியுள்ளதை தொடர்ந்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஜெனிலியாவுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டு அவரைப் பற்றி காதலுடன் பல வார்த்தைகளை பகிர்ந்துள்ளார் ரித்தேஷ் தேஷ்முக்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “24 வருடங்களுக்கு முன்பாக நமது இதயங்கள் ஒன்றிணைந்ததுடன் ஒருவரை ஒருவர் விட்டுப் போகக்கூடாது என்று முடிவு எடுத்தன. நீ எப்போதுமே என்னுடைய பாதுகாப்பான இடத்தில் இருந்திருக்கிறாய். என்னுடைய மிகப்பெரிய சாதனையும் நீதான். என்னுடைய மென்மையான கனவு நனவானது. என்னை தேர்ந்தெடுத்ததற்காக தினமும் உனக்கு நன்றி சொல்கிறேன். என்னுடைய தோழி, என்னுடைய காதலி, என்னுடைய எல்லாமும்... நான் உன் மீது எல்லையில்லா காதலுடன் இருக்கிறேன் ஜெனிலியா” என்று கூறியுள்ளார்.