உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆங்கிலோ இந்திய பெண்ணை காதலிக்கும் வடசென்னை பையன்: 'அன்பே டயானா'வின் கதை

ஆங்கிலோ இந்திய பெண்ணை காதலிக்கும் வடசென்னை பையன்: 'அன்பே டயானா'வின் கதை


'ஜமா' படத்தை தயாரித்து, இயக்கிய பாரி இளவழகன் தற்போது நடித்து வரும் படம் 'அன்பே டயானா'. மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் சார்பில் யுவராஜ் கணேசன், சத்யா கரிகாலன் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்தில், பாரி இளவழகன் கதாநாயகனாக நடித்ததுடன், கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவர்களுடன் ரோஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழுநீள கதாபாத்திரத்தில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். சேத்தன், யுடியூபர் பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பரத் சங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. அதில் சொல்லப்பட்டுள்ள படத்தின் கதை இதுதான்.

வியாசர்பாடி, பெரம்பூர் பகுதியை சேர்ந்த நடுத்தர இளைஞன்தான் கதையின் நாயகன். அவனது குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் தனித்தனி குணாதிசயங்கள் இருக்கிறது. ஆனாலும் நாயகன் அதை காட்டிக் கொள்ளாமல் கெத்தாக திரிகிறார்.

இப்படியான சூழலில், நாயகன் ஒரு ஆங்கிலோ இந்திய பெண்ணை காதலிக்க ஆரம்பிக்கிறார். கலாசாரம், மொழி, வாழ்க்கை முறைகள் என பல்வேறு வேறுபாடுகள் மோதும் போது உருவாகும் சம்பவங்கள் களேபரமாக வெடிக்கின்றன. காதலும், குடும்பமும், கெத்தும், காமெடியும் கலந்து நகரும் காட்சிகளை கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !