திரிஷா பற்றி குந்தவை கருத்து : வருத்தம் தெரிவித்த பார்த்திபன்
சென்னையில் தனியார் விருது விழா நடைபெற்றது. இதில் இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பார்த்திபன் பேசும்போது சில பிரபலங்களின் போட்டோக்களை திரையில் காட்டினர். அப்போது அந்த திரையில் நடிகை த்ரிஷா போட்டோ வந்தபோது அவரை குறித்து கவிதை கேட்டுள்ளனர். அதற்கு, ‛‛குந்தவை இப்போ வீட்டுக்குள்ளே குந்தவைக்கப்பட்டால் நல்லது. எல்லா விஷயத்தையும் வெளிப்படையாக பேச முடியாது என பார்த்திபன் பேசினார். அவர் காமெடியாக பேசினாலும் அந்த பேச்சு சர்ச்சை ஆனது.
அதற்கு திரிஷா பதிலடியாக இன்ஸ்டா ஸ்டோரியில், சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் எனக்கு ஒரு தகவலைத் தெரிவித்தனர். ஒரு தனி நபரின் வேண்டுகோளுக்கு இணங்க, அவரது உதவியாளர் மூலம் கடைசி நிமிடத்தில் எனது பெயரும் படமும் (அந்த நிகழ்ச்சியில்) சேர்க்கப்பட்டதாக அவர்கள் கூறினர். ஒரு மைக்ரோபோன் (ஒலிபெருக்கி) கையில் இருப்பதால் மட்டும் ஒரு கருத்து அறிவார்ந்ததாகவோ அல்லது நகைச்சுவையானதாகவோ மாறிவிடாது. அது முட்டாள்தனத்தை உரக்கச் சொல்ல மட்டுமே உதவும். அறிவில்லாமல் பேசப்படும் தரமற்ற வார்த்தைகள், அவை யாரை நோக்கி பேசப்படுகிறதோ அவர்களை விட, அந்தப் பேச்சாளரைப் பற்றித் தான் அதிகம் வெளிப்படுத்தும் என்று கூறியுள்ளார்
திரிஷா பதிவை தொடர்ந்து நடிகர் பார்த்திபன் அளித்த பதிலில், ‛‛எது நடந்ததோ அது தவறாகவே நடந்துள்ளது இதில். வருந்துவதைத் தவிர வேறு வழியில்லை'' என தெரிவித்துள்ளார்.