ஆரம்பமாகாத 'ஆயிரத்தில் ஒருவன் 2' : அடுத்து 'புதுப்பேட்டை 2' எழுதி முடித்த செல்வராகவன்
தமிழ் சினிமாவில் 2000ம் ஆண்டுகளில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். கடந்த சில வருடங்களாக அவர் தொடர்ச்சியாக படங்களை இயக்குவதில்லை. நடிப்பில் பிஸியாகிவிட்டார். கடைசியாக அவர் இயக்கிய 'நானே வருவேன்' படம் 2022ல் வெளிவந்தது.
தற்போது 'மெண்டல் மனதில், 7 ஜி ரெயின்போ காலனி 2' ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இந்தப் படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று ''புதுப்பேட்டை 2' எழுதி முடித்துவிட்டேன்,” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
'7 ஜி ரெயின்போ காலனி 2' படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி சுமார் இரண்டு வருடங்களாகிறது. ஆனாலும், அந்தப் படத்தை இன்னும் முடிக்கவில்லை. 2024ல் ஆரம்பமாகும் என 2021ம் ஆண்டே 'ஆயிரத்தில் ஒருவன் 2' படத்தின் அறிவிப்பை வெளியிட்டார்கள். ஆனால், இதுவரையிலும் அப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகவில்லை.
அதையும் ஆரம்பித்து, 'புதுப்பேட்டை 2' படத்தையும் ஆரம்பித்து முடிக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். செய்வாரா செல்வராகவன் ?.