20வது தயாரிப்பை அறிவித்த தனுஷ்
நடிகராக இருந்த தனுஷ் 2010ம் ஆண்டு 'வொண்டர்பார் பிலிம்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் சவுந்தர்யா ரஜினி இயக்கிய '3' படத்தை முதலில் தயாரித்தது. அதன்பிறகு 'எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி 1 மற்றும் 2ம் பாகங்கள், காக்கி சட்டை, காக்கா முட்டை, மாரி-1, 2ம் பாகங்கள், நானும் ரவுடிதான், தங்கமகன், விசாரணை, அம்மா கணக்கு, சினிமா வீரன், ப.பாண்டி, காலா, வடசென்னை, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இட்லி கடை' படங்களை தயாரித்தது. தற்போது தனுஷ் நடிக்கும் 55வது படத்தை தயாரித்து வருகிறது. இதனை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.
கடந்த15 ஆண்டுகளில் 19 படங்களை தயாரித்த வொண்டர்பார் நிறுவனம் தற்போது தனது 20வது படத்தை அறிவித்துள்ளது. இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. தனுசுடன் இணைந்து பிரிமார்க் புரொக்டக்ஷன் சார்பில் ஹரிதா லிங்கசாமி இணைந்து தயாரிக்கிறார். ரமேஷ் நந்தன் இயக்குகிறார். நடிகர், நடிகைகள் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. ரமேஷ் நந்தன், 'வெந்நிற இரவுகள்' எனும் இசை ஆல்பத்தை இயக்கியிருந்தார்.