'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, சீமான், யோகி பாபு, கிர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'எல்.ஐ.கே'. பிரதீப் ரங்கநாதன் நடித்த படங்கள் தொடர்ச்சியாக 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வந்த நிலையில் இந்த படம் அவருக்கு சறுக்கலாக அமைந்தது. படம் 70 கோடி வசூலித்தாலும் படத்தின் பட்ஜெட் பெருசு என்பதால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது : நான் ஒரு கனவுடன் வந்தேன், சிறியதல்ல, பாதுகாப்பானதும் அல்ல, நம்பிக்கையின் புயல். இந்தக் கதை கோடிக்கணக்கில் எதிரொலிக்கும். திரையரங்கின் சுவர்களை அதிர வைக்கும் என்ற நம்பிக்கை நான் கைதட்டலைக் கற்பனை செய்தேன், அதைத் திரையரங்குகளில் கண்டேன். நான் சிரிப்பை வரவழைத்தேன், அதைத் திரையரங்குகளில் கேட்டேன். ஆனால் இன்னமும் 100 கோடி என்ற மைல்கல்லைத் தொடவில்லை. உண்மையைச் சொல்லப்போனால், அதைவிட இருமடங்கு வசூலை கற்பனை செய்திருந்தேன். ஆனால் இன்னமும் எங்கோ, ஏதோ ஒன்று சரியாகப் பொருந்தவில்லை. ஏதோ ஒன்று கைகூடவில்லை.
இறுதி முடிவைப் பற்றி சற்று வருத்தமாக இருந்தாலும். நான் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கிறேன், ஏனென்றால் முன்பே குறிப்பிட்டது போல, இந்தப் படம் வெளியாவதே எனக்கு ஒரு பிளாக்பஸ்டர். பாராட்டுக்களைப் பெற, நான் போற்றிய குரல்களிடமிருந்து, நான் மதித்த மனங்களிடமிருந்து என் தொலைபேசி பலமுறை ஒலிக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் யதார்த்தம், அது வேறு ஒரு குரலைத் தேர்ந்தெடுத்தது.
கலவையான வார்த்தைகள், அளவான புன்னகைகள், புகழை விட உரத்த கேள்விகள் இருந்தும், இதோ நான் நிற்கிறேன். உடைந்து போகவில்லை, உலுக்கப்படவில்லை, ஆனால் பெருமிதம், ஆழ்ந்த பெருமிதம். ஏனென்றால் இந்தப் படத்திற்குப் பின்னால், யாரும் காணாத போராட்டங்கள் இருந்தன. தூக்கமில்லாத இரவுகள், மவுனமான அச்சங்கள் மற்றும் என்னால் மட்டுமே உணர முடிந்த ஆயிரம் தடைகள் கடவுளுக்கு மட்டுமே தெரியும். இங்கு வந்து சேர என்னவெல்லாம் தேவைப்பட்டது என்று. 70 கோடிக்கும் மேல் வசூல் மிகப்பெரியதல்ல, ஆனால் உண்மையானது, மற்றும் உழைத்துச் சம்பாதித்தது. என்று பதிவிட்டுள்ளார்.