பிளாஷ்பேக் : தேசிய விருது பெற்ற 'தங்கப்பதுமை'
1959ம் ஆண்டு சிவாஜி, பத்மினி நடிப்பில் வெளியான படம் தங்கப்பதுமை. ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கியிருந்தார். ஜூபிடர் பிக்சர்ஸ் சார்பில் எம்.சோமசுந்தரம் தயாரித்திருந்தார். விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர்.
ஜூபிடர் பிக்சர்ஸ் சோமு, 1930களில் வெளிவந்த கண்ணகி கதையை சிவாஜி கணேசன் கோவலனாக நடிக்க ரீமேக் செய்ய நினைத்தார். அவர் அந்தப் படத்தை தனது வழிகாட்டியான சி. என். அண்ணாதுரைக்குத் திரையிட்டுக் காட்டினார். படத்தைப் பார்த்த அண்ணாதுரை, இது ஏற்கனவே மக்கள் அனைவரும் அறிந்த கதை இதை மீண்டும் படமாக்கினால் அது வெற்றி பெறாது. அதற்கு பதிலாக கணவரை மீட்க போராடும் மனைவி என்ற ஒன் லைனை வைத்துக் கொண்டு வேறொரு கதையை படமாக எடுக்கலாம் என்று கருத்து சொன்னார்.
ஹாலிவுட் திரைப்படமான 'தி எகிப்தியன்' என்ற படத்தில் கதையை தழுவி தங்கப்பதுமை படத்தின் கதையை எழுதினார்கள். 8 லட்சம் செலவில் இந்தப் படம் தயாரானது. இன்றைய மதிப்பீட்டில் 50 கோடி ரூபாய். படம் பெரும் வெற்றி பெற்றதுடன், 1959ம் ஆண்டிற்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருதையும் வென்றது. தேசிய அளவில் இரண்டாவது பரிசை பெற்றது.