பணம் வேண்டாம் ; ஷாருக்கானின் பெருந்தன்மையால் கோடிகளை குவிக்கும் மராத்திய படம்
கடந்த மே மாதம் மராத்திய மொழியில் 'தேவுல் பந்த் 2' என்கிற திரைப்படம் வெளியானது. விவசாயிகளின் பிரச்னையை மையப்படுத்தி வெளியான இந்த படத்தை பிரவீன் தார்டே என்பவர் இயக்கியுள்ளார். 10 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் தற்போது 82 கோடி வசூலித்து அடுத்ததாக 100 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், நடிகர் ஷாருக்கான் செய்த ஒரு முக்கிய உதவியினால் மட்டுமே இந்த படம் வெளியானது என்றும், இல்லாவிட்டால் இது ரிலீஸ் ஆகி இருக்கவே முடியாது என்றும் சமீபத்தில் படத்தின் இயக்குனர் நெகிழ்ச்சியுடன் ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.
விஷயம் இதுதான் : இந்த படத்தின் விஎப்எக்ஸ் (VFX) பணிகளை ஷாருக்கானுக்கு சொந்தமான ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தில்தான் மேற்கொண்டு வந்தனர். விஎப்எக்ஸ் பணிகளுக்காக 12 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கியிருந்த நிலையில், இறுதி பில் தொகை 42 லட்சம் ரூபாயாக உயர்ந்தது. ஆனால், தயாரிப்பாளரிடம் மேற்கொண்டு செலுத்துவதற்கு பணம் எதுவும் இல்லை., இந்த தொகையை செலுத்தினால் தான் படத்தை வெளியிட முடியும் என்கிற சூழ்நிலையில், ரெட் சில்லீஸ் நிறுவனத்திடம் அவர்கள் உதவி செய்யுமாறு கோரிக்கை வைத்தனர்.. இது உடனடியாக ஷாருக்கானின் கவனத்திற்கு சென்றது.
இந்த நிறுவனம் இதற்கு முன்பு மராத்தியில் தயாரித்திருந்த 'முல்சி பேட்டன்' என்கிற படம் தான் பின்னர் சல்மான்கான் நடிப்பில் 'அந்திம்' என்கிற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த தகவல் ஷாருக்கானுக்கு தெரிய வந்ததும் அவர்கள் திறமை மீது நம்பிக்கை வைத்து, பில் தொகை எதையும் பெற்றுக் கொள்ள வேண்டாம், பிறகு கணக்கு பார்த்துக் கொள்ளலாம்; அவர்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கி விடுங்கள் என்று கூறியதை தொடர்ந்து இந்த படம் திரையரங்குகளில் வெளியானது.
இந்த தகவலை கூறியுள்ள இயக்குனர், ஷாருக்கானுக்கு எப்போதுமே சினிமா மட்டும்தான் முக்கியமாக தெரிகிறது. அதுவும் மராத்தி சினிமா மீது அவர் காட்டிய இந்த மரியாதைக்கு நான் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.