மனதிற்கு ஓய்வு தேவை : வலைதளத்தை விட்டு சிலகாலம் விலகிய கயாடு லோஹர்
‛டிராகன்' படத்தின் மூலம் தமிழில் பிரபலமானவர் நடிகை கயாடு லோஹர். தொடர்ந்து ‛இதயம் முரளி, இம்மார்ட்டல்' போன்ற படங்களில் நடித்துள்ளார். இவற்றில் இதயம் முரளி படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. அடுத்து மாரி செல்வராஜின் ‛மஞ்சணத்தி' படத்தில் நடிக்கிறார். தவிர மலையாளம், தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார். ‛‛வலைதளங்களில் தன்னை பற்றி நிறைய அவதூறுகள் பரபரப்படுகின்றன. இது வருத்தத்தை அளிக்கிறது'' என அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இந்நிலையில் சமூகவலைதளங்களில் இருந்து சில காலம் விலகி இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், ‛‛சமூக வலைதளங்களில் இருந்து சிறிது காலம் விலகுகிறேன். சில நேரங்களில், நாம் நம் உடலுக்கு கொடுக்கும் அதே அளவிலான ஓய்வு நம் மனதிற்கும் தேவைப்படுகிறது. திரைக்கு அப்பாற்பட்ட வாழ்க்கையையும் என்னையும் முழுமையாக உணர அதிக நேரம் செலவிட வேண்டியதன் அவசியத்தையும் நான் உணர்கிறேன்.
இங்கு எனக்கு ஆதரவளித்த என்னை ஊக்கப்படுத்திய மற்றும் அன்பை கிர்ந்த அனைவருக்கும் நன்றி. உங்களின் செய்திகளும் அன்பும் நீங்கள் நினைப்பதை விட எனக்கு மிகவும் மதிப்புமிக்கவை. நான் சில காலம் சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருப்பேன், ஆனால் முக்கியமான அறிவிப்புகள் ஏதேனும் இருந்தால், அவை எனது குழுவினரால் பகிரப்படும். அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் அன்பு கிடைக்க வாழ்த்துகிறேன். விரைவில் சந்திப்போம்'' என குறிப்பிட்டுள்ளார்.