மகளின் திருமண போட்டோவை வெளியிட்ட குஷ்பு
தமிழ் சினிமா மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவிலும் 90களில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருந்தவர் நடிகை குஷ்பு. அவரும் இயக்குனர் சுந்தர் சியும் காதல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என இரண்டு மகள்கள். மூத்த மகள் அவந்திகா நடிகையாகிவிட்டார். மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்து வருபவர் தமிழில் 'அட்டாக்கர்' படம் மூலம் அறிமுகமாகிறார். இளைய மகள் தயாரிப்பில் இறங்கி உள்ளார்.
அவந்திகாவிற்கும் ஷ்ரவன் சீனிவாசன் என்பவருக்கும் திருமணம் முடிவாகி இருந்தது. பிரதமர் மோடி, முதல்வர் விஜய் ஆகியோருக்கு குடும்பத்தினர் உடன் நேரில் சென்று அழைப்பு விடுத்தார் குஷ்பு. இந்நிலையில் அவந்திகா - ஷ்ரவன் திருமணம் கோவாவில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நேற்று நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள், சினிமா நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜூனா, திரிஷா, லிஸி, சரிகா, அனில் கபூர், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பங்கேற்ற போட்டோக்கள், வீடியோக்கள் வலைதளங்களில் வெளியாகின. ஆனால் மணமக்கள் புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில் குஷ்பு அந்த போட்டோக்களை வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அதனுடன், ‛‛எங்கள் அருமை மகள் அவந்திகா - ஷ்ரவன் திருமணம், ஜூன் 25 அன்று குடும்பத்தினர் மற்றும் அன்பான நண்பர்கள் சூழ நடந்தது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம். இந்த அழகிய பயணத்தை தொடங்கும் அவர்களுக்கு உங்கள் ஆசிகளையும் நல்வாழ்த்துகளையும் கோருகிறோம்'' என குறிப்பிட்டுள்ளார்.