உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிம்பு படங்களுக்கு இனி ஒத்துழைப்பு இல்லை: தயாரிப்பாளர் சங்கம் முடிவு

சிம்பு படங்களுக்கு இனி ஒத்துழைப்பு இல்லை: தயாரிப்பாளர் சங்கம் முடிவு

சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரித்தார். இந்த படத்தை சிம்பு தன் கையில் எடுத்துக் கொண்டு அவரது விருப்பத்துக்கு படத்தை நடித்து முடித்து, வெளியிட்டதால் படமும் தோல்வி அடைந்து தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இது தொடர்பாக அவர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக நடந்த பேச்சு வார்த்தையில் மைக்கேல் ராயப்பனுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் விதமாக சிம்பு சம்பளம் பெறாமல் ஒரு படத்தில் நடித்துக் கொடுக்க வேண்டும், இல்லாவிட்டால் 6 கோடியே 60 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். இந்த தொகையை அவர் அடுத்து நடிக்கும் படங்களில் இருந்து தலா ஒரு படத்திற்கு 2.2கோடி வீதம் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கு சிம்புவும் ஒத்துக் கொண்டார்.

ஆனால் ஒப்புக் கொண்டபடி சிம்பு ஈஸ்வரன் படத்தின் மூலம் 2.2கோடி கொடுக்கவில்லை. இதுகுறித்து மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர் சங்கத்தில் மீண்டும் புகார் கொடுத்தார். ஈஸ்வரன் படத்தின் தயாரிப்பாளர் பாலாஜி கப்பாவும் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர் என்பதால் அவர் படத்தை தடை செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். அதன்படி படமும் வெளியானது.

இந்த நிலையில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு சேர வேண்டிய பணத்தை சிம்பு தராத வரையில் அவரது எந்த படத்திற்கும் இனி ஒத்துழைப்பு தரப்போவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த தீர்மானம் தொடர்பாக பெப்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பெப்சியின் ஒப்புதல் கிடைத்த பிறகு முறைப்படி அறிவிக்கப்பட இருக்கிறது.

சிம்பு மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஈஸ்வரன் படத்தின் தயாரிப்பாளர் பாலாஜி கப்பா முழு ஆதரவு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. சங்கத்துக்கு ஒத்துழைப்பு தராத சிம்பு மீது எடுக்கப்படும் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருப்போம் என்று அவர் கூறியிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !